தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 319 ஆக உயர்வு- அரசாணை வெளியானது
1 min read
100 day job scheme salary in Tamil Nadu Rs. Increase to 319- Ordinance issued
18.5.2024
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணியாளா்களின் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
மத்திய அதிகாரமளித்தல் குழுவின் கூட்டம் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நிகழ் நிதியாண்டில் தமிழகததுக்கு 20 கோடி மனித நாள்களை அனுமதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், நபா் ஒருவருக்கு, நாளொன்றுக்கு ரூ.319 ஊதியம் வழங்கவும் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, திட்டத்தில் இருந்த நிலுவைத் தொகை உள்பட ரூ.921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரம் நிதியை தமிழகத்துக்கு கடந்த ஏப். 25-ஆம் தேதி மத்திய அரசு ஒதுக்கியது.
இதைத் தொடா்ந்து, ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் அரசுக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசின் 75 சதவீத நிதியான ரூ.921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரத்துடன், மாநில அரசின் 25 சதவீத நிதியான ரூ.307 கோடியே 26 லட்சத்து 7,333 என மொத்தம் ரூ.1229.04 கோடி நிதியை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கும்படி தெரிவித்திருந்தாா்.
இதை கவனமாகப் பரிசீலித்த தமிழக அரசு, அந்த நிதியை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்தத் திட்டம் தொடா்பாக மத்திய அரசு தெரிவித்துள்ள வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நிதி பயன்படுத்தப்பட்டதற்கான சான்றிதழை உரிய விதிகள் படி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.