‘3-வது வெற்றி’ – பிரதமர் மோடிக்கு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து
1 min read
‘3rd win’ – Foreign leaders congratulate PM Modi
5.5.2024
இந்தியாவில் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ‘இந்தியா’ கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மத்தியில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் தேர்தல் வெற்றிக்காக மோடிக்கு மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வரலாற்று சிறப்புமிக்க 3-வது வெற்றியை பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். மோடியின் தலைமையில் மிகப்பெரிய ஜனநாயகம் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையும். மொரீசியஸ்-இந்தியா கூட்டுறவு என்றும் நிலைத்திருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
தேர்தல் பணிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்தியாவுக்கு அமெரிக்க அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாபெரும் தேர்தல் பணியை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்திய அரசுக்கும், வாக்காளர்களுக்கும் அமெரிக்க அரசு சார்பில் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் பற்றி நாங்கள் எந்த கருத்தும் கூறப்போவதில்லை. கடந்த 6 வாரங்களாக வரலாற்றின் மிகப்பெரிய ஜனநாயக பணியில் மக்கள் பங்கேற்று வாக்கு செலுத்தியதை நாம் கண்டோம். இந்திய அரசு மற்றும் இந்திய மக்களுடன் அமெரிக்காவுக்கு நல்ல கூட்டுறவு இருந்து வருகிறது. இனி வரும் காலங்களிலும் அது தொடரும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வாழ்த்து தெரிவித்துள்ளார். “இந்தியா-இத்தாலி ஆகிய இருநாட்டு மக்களின் நலனுக்காகவும் நாம் இணைந்து பணியாற்றுவோம்” என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி.
அதேபோல, பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமரும், மொரிஷியஸ் பிரதமரும், இலங்கை அதிபரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள்! பிரதமர் மோடி மீதான இந்திய மக்களின் நம்பிக்கையை இந்த வெற்றி வெளிக்காட்டுகிறது. இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவதை எதிர்நோக்கியுள்ளோம்” எனப் பதிவிட்டுள்ளார்.