தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 29-ம் தேதி வரை நடைபெறும்
1 min read
The Tamil Nadu Legislative Assembly session will continue till 29th
12.5.2024
தமிழக சட்டப்பேரவையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 15-ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் பிப்ரவரி 19, 20-ம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டு, 22-ம் தேதி வரை விவாதம் நடைபெற்றது.
பிறகு, மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்பதால், துறைகள் தோறும் நிதி ஒதுக்கத்துக்கான மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்படாமல், பேரவை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது தற்போது மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 24-ம் தேதி தொடங்கும் என்று பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்தார். இதற்கிடையே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், சட்டப்பேரவை கூடும் தேதி 24-ல் இருந்து ஜூன் 20-ம் தேதிக்கு மாற்றப்படுவதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.
இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக இன்று அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 29- ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 20 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும். வழக்கமாக காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடும் நிலையில், இந்த முறை காலை 9.30 மணிக்கு கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.