இராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம்- புங்கன்குளம் கால்வாய் வெட்டும் பணி துவக்கம்
1 min read
Ramanadi-Jambunadi Link Canal Project- Pungankulam Canal Cutting Commencement
24/5/2024
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் கடையம் வட்டார பகுதி பொதுமக்களின் நீண்ட கால கனவு திட்டமான இராம நதி ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்தின் ஒரு பகுதியாக புங்கன்குளம் கால்வாய் வெட்டும் பணி நேற்று பூமி பூஜையுடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டம். கீழப்பாவூர் கடையம் ஒன்றியங்களின் வறட்சியான பகுதிகள் வளம்பெற இராமநதி அணையின் உபரி நீரை ஜம்பு நதியில் அமைந்துள்ள குத்தாலபேரி. நாராயணபேரி அணைகட்டு களுக்கு கொண்டு வருவது இராமநதி ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டமாகும்.
இத்திட்டம் பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதல்வராக இருந்த போது 1960-களில் வாக்குறுதி அளிக்கப்பட்டு பின்னர் வந்த காலங்களில் அது நிறைவேறாமல் போனது, 1974ஆம் ஆண்டு இராமநதி அணை முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டபோதும் இத்திட்டம் விடுபட்டுபோனது
சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என அனைவராலும் வலியுறுத்தப்பட்டு வந்த இத்திட்டம் 2015ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் .ஜெ.ஜெயலலிதா 110 விதியின் கீழ் 42 கோடி மதிப்பில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு முதல் கட்டமாக ரூபாய் 5 கோடி நிலம் கையகப்படுத்தவும், ரூபாய் 40 லட்சம் ஆய்வு பணிக்கும் ஒதுக்கப்பட்டு 24.12.2015 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இந்த கால்வாய் வரும் பகுதி களக்காடு முண்டன் துறை புலிகள் காப்பத்தின் வெளிமண்டல பாதுகாப்பு பகுதியில் வருவதால் வனத்துறையின் தடையின்மை சான்று பெற்று அதன் பிறகு இந்த திட்டத்தை தொடர வேண்டும் என்று கூறி வனத்துறை இத்திட்டப் பணிகளை நிறுத்திவிட்டது. மேலும் நில உரிமையாளர்களுக்கும் அப்போது இழப்பீடுகள் வழங்காததால் அவர்களும் எதிர்ப்பு தெரிவிக்க திட்டம் நின்று போனது.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற உடன் இத்திட்டத்தினை தொடர வனத்துறை அனுமதி பெறும் முயற்சியும் நில உரிமையாளர் களுக்கு இழப்பீடுகள் வழங்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ எம்பி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததின் விளைவாக மாநில வன உயிரின நலவாரிய குழு மாற்றியமைக்கப்பட்டு அக்குழு கூடி மத்திய வனத்துறைக்கு பரிந்துரைத்தது. அதனைத் தொடர்ந்து மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ எம்பி நேரிலும் தபால் வழியும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மத்திய வனத்துறை அனுமதி வழங்கி கடந்த 11ஆகஸ்ட் 2023 அன்று ஆணை வெளியிட்டது. இந்நிலையில் வனத்துறை அனுமதியும் நில எடுப்பு பணிகளும் நிறைவடைந்து உள்ள நிலையில் புங்கன் குளம் கால்வாய் வெட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது
கீழப்பாவூர், கடையம் ஒன்றிய பகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையான இராம நதி ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆவுடையானூர் பத்தமநாதபேரி குளத்தின் மறுகால் மூலம் புங்கன் குளம் செல்லும் சுமார் 5கி.மீ .தூரத்திற்கான புங்கன் குளம் கால்வாய் வெட்டும் பணி தொடர்ந்து நடைபெறவுள்ளது.
புங்கன்குளம் கால்வாய் வெட்டும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் முத்துமாணிக்கம், பொதுப்பணித்துறை உதவியாளர் பவுன்ராஜ், இராமநதி ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்ட அமைப்பாளர் இராம.உதயசூரியன்
மற்றும் அந்த பகுதிகளின் முக்கிய பிரமுகர்கள் ஆவுடையானூர் கு.செல்லப்பா, மாடியனூர் காமராஜ், இளங்கோ, பாண்டியன், பாஸ்கர், சின்னத்துரை, சௌந்தர்ராஜ், சண்முகராஜ், அலெக்ஸ் ,நிர்மல் ராஜ் டேவிட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.