லடாக்: வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
1 min read
Ladakh: 5 soldiers killed in floods
29.5.2024
லடாக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே டி-72 ரக ராணுவ டாங்கியில் 5 ராணுவ வீரர்கள் ஆற்றை கடக்க முற்பட்டனர். அப்போது ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டாங்கியுடன் ராணுவ வீரர்கள் அடித்து செல்லப்பட்டனர். இந்நிலையில் அடித்து செல்லப்பட்ட ராணுவ வீரர்கள் 5 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மந்திர் மோர் அருகே ஆற்றைக் கடக்கும் பயிற்சியின் போது திடீரென நீர்மட்டம் அதிகரித்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அதிகாலையில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “லடாக்கில் அருகே டாங்கியில் ஆற்றை கடக்கும் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் நமது துணிச்சலான இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த வருத்தம். தேசத்திற்கு நமது துணிச்சலான வீரர்களின் முன்மாதிரியான சேவையை நாங்கள் ஒருபோது மறக்க மாட்டோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துக்க நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.