கேரளகுடை, ஆந்திர காபி பற்றி பிரதமர் மோடி பெருமிதம்
1 min read
Prime Minister Modi is proud of Keralakudai, Andhra coffee
30.5.2024
லோக்சபா தேர்தல் காரணமாக ‛ மன் கி பாத் ‘ நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தது. 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, இந்த நிகழ்ச்சி இன்று ( ஜூன் 30) மீண்டும் துவங்கியது. இன்றைய ‛மன் கி பாத்’ நிகழ்ச்சி 111வது நிகழ்ச்சி ஆகும்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: நமது வாழ்க்கையில் தாயாருக்கு பெரிய மதிப்பு உண்டு. குழந்தைகள் மீது அளவில்லாத அன்பை பொழிகிறார். அவருக்கு நம்மால் எதையும் திருப்பித் தர முடியாது. ஆனால், அதற்கு மாற்றாக ஒரு சிறப்பான விஷயத்தை செய்ய முடியும். இதன் அடிப்படையில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் சிறப்பு பிரசாரம் ஒன்று துவக்கப்பட்டது.
எனது தாயார் நினைவாக மரக்கன்று ஒன்றை நட்டுள்ளேன். இந்திய மக்களும், உலக மக்களும் தங்களது தாயார் நினைவாக மரக்கன்று ஒன்றை நட வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். இதனை ஏற்று ஏராளமானோர், மரக்கன்றுகளை நட்டு #Plant4Mother, #Ek_Ped_Maa_Ke_Naam ஆகிய ஹேஷ்டாக்குகளில் அது தொடர்பான படங்களை பதிவிட்டனர்.
கேரள கலாசாரம், பாரம்பரியம் மற்றும் சடங்குகளில் குடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. கேரளாவின் அட்டப்பாடியில் தயாராகும்‛ கார்தும்பி குடைகள்’ சிறப்பு வாய்ந்தவை. இந்த குடைகளை கேரளாவைச் சேர்ந்த பழங்குடியின சகோதரிகள் தயாரிக்கின்றனர். இன்று இந்த குடைகளின் தேவை அதிகரித்து வருகிறது. ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. இவர்கள் குடைகளை மட்டும் விற்கவில்லை. அவர்களது பாரம்பரியத்தை உலகம் முழுவதும் அறிமுகம் செய்கின்றனர்.
ஆந்திராவின், சீதா ராம ராஜூ மாவட்டத்தின் அறுவடை செய்யப்படும் அரக்கு காபி அதன் நறுமணம் மற்றும் சுவைக்கு பெயர்பெற்றது. இந்த காபிக் கொட்டையை அறுவடை செய்வதில் 1.5 லட்சம் பழங்குடியின குடும்பங்கள் ஈடுபட்டு உள்ளன. இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. இந்த காபி ஜி20 மாநாட்டின் போதும் பரிமாறப்பட்டது. வாய்ப்பு கிடைக்கும் போது ஒவ்வொருவரும் இந்த காபியை சுவைத்து பாருங்கள்
காஷ்மீர் மக்களும், தங்கள் பகுதி உற்பத்தி ஆகும் பொருட்களை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றனர். காஷ்மீரை சேர்ந்த அப்துல் ரஷீத் மிர் என்ற விவசாயி, தனது நிலம் மற்றும் அக்கம் பக்கத்தினர் அறுவடை செய்யும் பட்டாணியை லண்டனுக்கு ஏற்றுமதி செய்கிறார். பொது மக்களும் , இதுபோன்ற திட்டங்கள் குறித்து ,#myproductsmypride என்ற ஹேஷ்டாக்கில் என்னிடம் பகிருங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.