விஷச்சாராய சாவு: ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு
1 min read
Vishacharaya death: Self-initiated case registered, High Court
1.7.2024
கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது, உயர்நீதிமன்றம்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் கடந்த மாதம் 65 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பூதாகாரமாக வெடித்தது.
இதையொட்டி தமிழகம் முழுக்க கள்ளச்சாராய வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த கள்ளச்சாராயத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்ததோடு, ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியது. மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி தொலைகாட்சியில் அளித்த நேர்காணல் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரிப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து நீதிபதிகள் கூறும் போது, கல்வராயன் மலையில் வேலைவாய்ப்பின்றி உள்ளூர்வாசிகளால் கள்ளச்சாராம் காய்ச்சப்படுகிறது. கல்வராயன் மலைப்பகுதியில் எந்த வேலைவாய்ப்பும் இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் நிலை உள்ளது.
கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக, பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டியுள்ளது. தமிழக தலைமை செயலாளர், மத்திய மாநில பழங்குடியின நலத்துறை, டிஜிபி, சேலம், கள்ளக்குறிச்சி ஆட்சியர்கள் இந்த விவகாரத்தில் பதில் அளிக்க உத்தரவிடப்படுகிறது என்றனர்.