சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல கெடுபிடி செய்ய கூடாது- அமைச்சரிடம் கோரிக்கை
1 min read
Do not insist on going to Sorimuthu Ayyanar Temple – Request to the Minister
23.7.2024
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு ஆடி அமாவாசையை யொட்டி 30ந்தேதி முதல் பக்தர்கள் செல்லவும், ஆக. 7ந்தேதி வரை தங்கியிருக்கவும் அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபுவிடம், முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நெல்லை, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டப்பகுதிகளை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பாபநாசம் மலைக்கு மேலே அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் குலதெய்வம் கோவிலாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தாகும்.
இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 100 ஆண்டுகளாக ஆடி அமாவாசைக்கு 5 நாட்களுக்கு முன்பாக கோவிலுக்கு சென்று, அங்கு குடில் அமைத்து உறவினர்களுடன் தங்கியிருந்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு, அமாவாசை முடிந்து மூன்று நாட்கள் தங்கியிருந்து ஊர் திரும்புவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த கொரோனா காலக்கட்டத்தில், பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செல்வதற்கு வனத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்ததுடன், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வில்லை. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில், பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
தற்போது இந்தாண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற ஆக.4ந்தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பக்தர்கள் வருகிற ஆக.1ந்தேதிக்கு பிறகு தான் கோவிலுக்கு செல்ல வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
எனவே ஆண்டாண்டு காலமாக அனுமதி அளித்ததை போல், இந்தாண்டும், வருகிற 30ந்தேதி முதல் ஆகஸ்ட் 7ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கும், அங்கே குடில் அமைத்து தங்குவதற்கும் சம்பந்தப்பட்ட வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி, பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் செய்திடவும், பக்தர்கள் தங்கிக் கொள்வதற்கும் உதவிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.