மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்வுரிமை மாநாடு
1 min read
Mancholai Tea Plantation Workers Right to Life Conference
23.7.2024
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வுரிமை மாநாடு பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை அருகே மாஞ்சோலை தேயிலை தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் புருசோத்தம்மன் தலைமை வகித்தார். மாரித்துரை வரவேற்று பேசினார் .கொண்டல்சாமி துவக்க உரையாற்றினார். தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் ஜமால், நிர்வாகி ஜப்பார், மனித நேய ஜன நாயக கட்சி மாநிலதுணை செயலாளர் அனிப்பிலால் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அசோக்குமார் தீர்மானங்களை முன்மொழிந்தார் மாநாட்டில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசியதாவது:-
மாஞ்சோலை தேயிலை தோட்ட ஒப்பந்த காலம் முடிவதற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளது. ஆனால் அந்த நிர்வாகம் அதற்குள் சம்பந்தப்பட்ட தேயிலைத்
தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து விரட்டி வருகிறது. இதனால் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கு ஒன்றிய மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
இல்லையெனில் போராட்டங்கள் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.சென்னையில் போர்டு கம்பெனி மூடும்போது பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது தமிழக அரசு தலையிட்டு அவர்களுக்கு போராட்டக் குழுவின் உதவியால் இழப்பீடு வாங்கிக் கொடுத்தது. அது போன்று தேயிலைத் தோட்ட தொழிலாளர் களுக்கும் இழப்பீடு கிடைப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..
இல்லையெனில் தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். தமிழக அரசின் கூட்டுறவு பண்ணையின் டேன் டீ நடத்த வேண்டும். தமிழக அரசு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைத்து உரிய முறையில் விசாரணை நடத்தி அவர்களின் கருத்துருவை தமிழக முதல்வர் கேட்டு மனிதாபிமான அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமலாபுரம் தி.மு.இராசேந்திரன், மறுமலர்ச்சி திமுக சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் அரசு அமல்ராஜ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் செரீப், எஸ் டி பி கட்சியின் தலைவர் நெல்லை முபாரக், தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற கழகப் பேரவையின் தலைவர் எஸ்.ஆர். பாண்டியன் தமிழக மக்கள் புரட்சிக் கழக தலைவர் அரங்க குணசேகரன்
மாஞ்சோலை பகுதி மக்கள் நல சங்க செயலாளர் வழக்கறிஞர் அரசு அமல்ராஜ், ஐந்திணை மக்கள் கட்சி தலைவர் தேவதாஸ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் அப்பாஸ், சாந்தி, ஜாபர், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பின் நிர்வாகி பீட்டர் ஆகியோர் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அந்த தேயிலை தோட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்கள். முடிவில் மே 17 இயக்கத்தின் நிர்வாகி முத்துக்குட்டி அனைவருக்கும் நன்றி கூறினார். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை
மே 17 இயக்கத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.