தமிழ்நாட்டின் ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு- மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
1 min read
Rs 6,362 crore allocated for Tamil Nadu’s railway projects – Minister Ashwini Vaishnav informs
24.7.2024
மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, காங்கிரஸ் அரசை விட ஏழு மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று புது டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது விளக்கினார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழகத்துக்கு பல்வேறு ரயில் திட்டப் பணிகளை நிறைவேற்ற ரூ.6,362 கேடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2009 – 2014ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட இது 7 மடங்கு அதிகம். கடந்த ஆண்டு தமிழகத்துக்கு ரூ.6,080 கோடி ஒதுக்கப்பட்டது. சென்னை கடற்கரை – எழும்பூர் இடையேயான நான்காவது வழித்தட ரயில்வே திட்டத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு தாமதம் செய்து வருவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில், 687 பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.33,467 கோடி செலவில், 1302 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் திட்டத்தை ரத்து செய்யுமாறு தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறது என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மற்ற மாநிலங்களுக்கு ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும் அவர் அறிவித்துள்ளார்.
அதில், ஒடிசாவுக்கு ரூ.10,586 கோடியும், ராஜஸ்தான் மாநிலத்துக்கு ரூ.9,959 கோடியும், உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.19,848 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சியை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் ரயில்வே பணிகளுக்கு ரூ.837 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.