தென்காசி: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
1 min read
Tenkasi: People’s Grievance Redressal Day meeting welfare assistance
31/7/2024
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 1306 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதோடு, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 நபர்களுக்கு தலா ரூ.13,500/- வீதம் ரூ.54,000/-க்கான தையல் இயந்திரங்களையும், பழங்குடியினர் நலத்துறையின் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பள்ளியர் இன மக்கள் 4 நபர்களுக்கு தலா ரூ.13,500/- வீதம் ரூ.54,000/- க்கான இலவச தையல் இயந்திரங் களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் 19 பயனாளிகளுக்கு தலா ரூ.5479/- வீதம் ரூ. 104,101/-க்கான மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களையும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.100,000/- வீதம் ரூ.5,00,000/- என மொத்தம் ரூ.7,12101/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியர்களின் வருவாய் ஈட்டும் பெற்றோர் இறந்து விட்டாலோ நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- மற்றும் ரூ.75,000/- வழங்கும் திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் நேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 38 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.50,000/- மதிப்பிலான பத்திரங்கள் 4 மாணவர்களுக்கும். ரூ.75,000/- மதிப்பிலான பத்திரங்கள் 34 மாணவர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர வழங்கினார்.
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 1306 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) அமிர்தலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.முருகானந்தம். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஷேக் அயுப். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார், கடையநல்லூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.