June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியை பிடித்தது- பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்

1 min read

Army takes power in Bangladesh- Prime Minister Sheikh Hasina takes refuge in India

5/6/2024
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் தலைநகரான டாக்காவை விட்டு வெளியேறி இந்தியா வந்தார். இதனை தொடர்ந்து இங்கு ராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் நடந்த வன்முறையில் பலர் பலியாயினர். பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி வந்தனர்.
வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு போரில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 2018-ல் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதையடுத்து அரசு நிறுத்தி வைத்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பேராட்டம் வன்முறையாக மாறியதில் இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.
அனைத்து பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் மூடப்பட்டன. சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நடந்த வன்முறையில் பொது சொத்துக்கள் சேதமடைந்தன. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
இன்று ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவர், டாக்காவை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. தனது சகோதரி ஷேக் ரிஹானாவுடன் சேர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

பிரதமர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வன்முறை வெடித்ததும், பிரதமர் இல்லத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டார். தற்போது அவர் எங்கு உள்ளார் எனத் தெரியவில்லை. டாக்காவில் நிலைமை பதற்றமாக உள்ளது. போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு உள்ளனர்.” என்றார்.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைந்த வன்முறையாளர்கள், வீட்டை சூறையாடியதுடன், அங்கிருந்த பொருட்களை தூக்கி சென்றனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் வெற்றி பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்நாட்டின் தந்தையும், முன்னாள் அதிபருமான முஜிபுர் ரஹ்மானின் சிலைகளை போராட்டக்காரர்கள் உடைத்தனர். இவரின் மகள் தான் ஷேக் ஹசீனா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவருடைய ஹெலிகாப்டர் திரிபுராவில் உள்ள அகர்தலா நகருக்கு வந்தடைகிறது என கூறப்பட்டது. ஆனால், அகர்தலாவில் உள்ள அதிகாரிகளோ அல்லது வெளிவிவகார அமைச்சகமோ இந்த தகவலை உறுதி செய்யவில்லை.

திரிபுரா உள்துறை செயலாளர் பி.கே. சக்ரவர்த்தி கூறும்போது, இதுபோன்ற தகவல் எதுவும் எங்களுக்கு இல்லை என கூறியுள்ளார்.
விமான கண்காணிப்பு வலைதளங்களில் ஒன்றான பிளைட்ராடார்24 வெளியிட்ட செய்தியில், டாக்காவில் இருந்து வங்காளதேச விமான படையை சேர்ந்த விமானம் ஒன்று அடையாளம் தெரியாத பகுதியை நோக்கி செல்கிறது என்றும் மேற்கு வங்காள பகுதியை கடந்து செல்கிறது என்றும் தகவல் தெரிவித்து உள்ளது.
வங்காளதேசத்தில் போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனாவை சுமந்து வரும் சி-130 விமானம் டெல்லி ஓடுபாதையில் இன்று மாலை 5.15 மணியளவில் தரையிறங்கும் என கூறப்பட்டது.

ஆனால் உத்தரபிரதேசம் ஹிண்டன் விமான நிலையத்தில் மாலை 5.15 மணிக்கு வந்திறங்கினார். அவர் இங்கிருந்து லண்டன் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.