வங்காள தேசம் செல்லும் ரெயில், விமான சேவை ரத்து
1 min read
Train and flight services to Bangladesh canceled
6.8.2024
வங்காளதேசத்தில், இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இதன் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். தற்போது அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
வங்காளதேசத்தில் நிலவி வரும் சூழலை கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வன்முறை எதிரொலியாக, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்கா வரை செல்லும் மைத்ரீ எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்துசெய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதேபோல, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை செல்லும் கொல்கத்தா-குல்னா-கொல்கத்தா பந்தன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் வருகிற 21-ந்தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து டாக்காவிற்கு விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ, விஸ்தாரா நிறுவனங்கள் வங்காளதேச தலைநகருக்கான அனைத்து விமானங்களையும் இன்று ரத்து செய்துள்ளன. அதேபோல ஏர் இந்தியா நிறுவனமும் டாக்காவிற்கு செல்ல இருந்த காலை விமானத்தை ரத்து செய்துள்ளதாகவும், டாக்காவிற்கு மாலை விமானத்தை இயக்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
விஸ்தாரா மும்பையிலிருந்து தினசரி விமானங்களையும், டெல்லியிலிருந்து டாக்காவிற்கு வாராந்திர மூன்று சேவைகளையும் இயக்குகிறது. அதேபோல ஏர் இந்தியா விமான நிறுவனம் டெல்லியில் இருந்து டாக்காவிற்கு தினசரி 2 விமானங்களை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.