வயநாடு நிலச்சரிவு; பிரதமர் மோடி பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல்
1 min read
Wayanad Landslide; Prime Minister Modi visited and consoled the people
10.8.2024
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 10) ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 30ம் தேதி கேரளா வயநாட்டில், முண்டக்கை, சூரல்மலை ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்தது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று(ஆகஸ்ட் 10) கேரளா வந்த பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் ஆரிப் முகமது கான் உடன் கண்ணணூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் சென்று நிலச்சரிவு பகுதிகளை பார்வையிட்டார்.
30 மணி நேரத்தில் ராணுவத்தினர் அமைத்த பெய்லி பாலத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்து அதனை கட்டமைத்தவர்களுடன் கலந்துரையாடினார். வெள்ளாரமலை பாலத்தையும் ஆய்வு செய்தார்.
இதன் பிறகு, முண்டக்கை, சூரமலை பகுதிகளுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அப்போது கவர்னர் ஆரிப்கான், அமைச்சர் சுரேஷ்கோபி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மோடியிடம் விளக்கம் அளித்தனர்.
சூரல்மலையில், நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நிலச்சரிவில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து, நிலச்சரிவு பாதிப்பு குறித்து வயநாட்டில் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்யும் என மோடி உறுதி அளித்தார். உடனடியாக வழங்கப்பட வேண்டிய உதவிகள் குறித்து கேரளா அரசு சார்பில் பிரதமர் மோடியிடம் மனு அளிக்கப்பட்டது.