June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் சாரல் திருவிழா- மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

1 min read

Charal Festival at Courtalam- District Collector inaugurated

17.8.2024
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கலைவாணர் அரங்கத்தில் குற்றாலம் சாரல் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் 16.08.2024 முதல் 1908.2022 வரை ஆகிய 4 நாட்கள் நடைபெறவுள்ள குற்றாலம் சாரல் திருவிழாவின் துவக்க விழா நேற்று தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி உதயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பேசியதாவது:-

தென்றல் தவழும் தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சாரல் விழாவிற்கு வருகை தந்திருக்கும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும். அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும். சுற்றுலா பயணிகளுக்கும் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சாரல் திருவிழா நமது மாவட்டத்தில் ஒரு முக்கிய பெருவிழா. இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள வேண்டும். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐ லவ் குற்றாலம் செல்ஃபி பாயிண்ட்
அமைக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை நமது விருந்தினர்கள் போல் மரியாதையுடனும் அன்புடனும் நடத்த அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். சாரஸ் விழா நிகழ்ச்சிக்காக அரும்பாடுபட்ட அனைத்து அலுவலர்களுக்கும், நன்கொடை வழங்கிய நல் உள்ளங்களுக்கும் எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி வணக்கம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

சாரல் திருவிழாவின் முதல் நாள் துவக்க விழா நிகழ்ச்சியாக மங்கள இசையுடன், கொழு கொழு குழந்தைகள் போட்டிகளும், இடைகால் மற்றும் சிந்தாமணி பள்ளி மாணவ, மாணவியர்களின் பல்சுவை நிகழ்ச்சியும், பொள்ளாச்சி கண்ணாடி வெண்புறா குழுவினரின் ஜிக்காட்டம் நிகழ்ச்சி, நெல்லை ஸ்ரீவித்யா நாட்டிய மன்றத்தினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, சிவகாசி வெண்மணி குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சி. கலைசுடர் மணி நாமக்கல் வேயிரவு வழங்கும் கிளாரினட் இசை நிகழ்ச்சி, சன்டிவி புகழ் திருமதி.கவிதா ஜவஹர் அவர்கள் தலைமையிலான மாபெரும் சிந்தனை பட்டிமன்றம், கேரளா மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் விஷ்ணுசரண் கலந்து கொள்ளும் தூத்துக்குடி யாழிசை ஆர்கெஸ்ட்ரா வழங்கும் திரைப்பட மெல்லிசை மற்றும் தென்காசி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் குடும்ப வன்முறை. குழந்தைத் திருமணம், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த காணொளி காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலகம் சார்பில் கொழுகொழு குழந்தை போட்டி நடைபெற்றது. 62 குழந்தைகள் போட்டியில் பங்கேற்றனர்.இதில் ஒன்பது முதல் 12 மாத குழந்தைகளின் எடை உயரம் ஊட்டச்சத்து நிலை, வளர்ச்சி படிநிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் டாக்டர் சரவணன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேலகரம் மற்றும் மருத்துவர் பாண்டித்துரை ஆர் பி எஸ் கே அவர்களின் நேரடி பரிசோதனையிலும் தேர்வான குழுந்தைகளில் முதல் பரிசு ரூ.5,000/-னை இலத்தூரை சேர்ந்த மகேஷ் பிச்சையா தம்பதியினரின மகளான இன்சிகா பானுவும், இரண்டாம் பரிசு ரூ.3000/-னை சாம்பவர் வடகரையைச் சேர்ந்த ராஜா, முத்துச்செல்வி அவர்களின் மகனான காளை ராஜாவிற்கும். மூன்றாம் பரிசு ரூ.2000/-னை சாம்பவர் வடகரையைச் சேர்ந்த சொரிமுத்து, ஜெயகிருஷ்ண லெட்சுமி அவர்களின் மகளான ஜெய விசாகாவிற்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் இரா.முருகன் , மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோனி பெர்னாண்டோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமிர்தலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் அ.வில்லியம் ஜேசுதாஸ். உதவி இயக்குநர் (மண்டல திருநெல்வேலி) வ.கோபால கிருஷ்ணன், கலை பண்பாட்டு மையம், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுஷ்மா, குற்றாலம் சுகாதார அலுவலர் இராஜகணபதி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திரளாக கலந்துகொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.