வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமார் எதிர்ப்பு
1 min read
Nitish Kumar opposes the Waqf Board Amendment Bill
24/8/2024
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி அரசு ஆட்சியில் இருக்கிறது. பா.ஜ.க. கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்து நிதிஷ்குமாரின் ஜே.டி.யு. மிக முக்கிய கட்சியாக இருந்து வருகிறது.
இந்த சூழலில் மத்திய அரசு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது வக்பு வாரியத்தில் பல சட்டத் திருத்தங்களை முன்மொழிந்து இருந்தது. இதற்கிடையே இந்தச் சட்டம் தற்போது என்.டி.ஏ. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன்படி மத்திய அரசு தற்போது முன்மொழிந்துள்ள வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு நிதிஷ்குமார் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் உள்ள, தெலுங்கு தேசம், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இந்த விவகாரத்தில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்த நிலையில், தற்போது நிதிஷ்குமார் கட்சியும் அதில் இணைந்துள்ளது.
நிதிஷ் குமார் தற்போது பீகார் மாநில முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். பீகாரில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. அங்கே சுமார் 18 சதவீத இஸ்லாமியர்கள் இருக்கும் நிலையில், நிதிஷ் கட்சி இந்தக் கருத்துகளை தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் இந்த வக்பு வாரிய சட்டத்திற்கு ஜே.டி.யு. ஆதரவு தெரிவித்தநிலையில், இச்சட்டத் திருத்தம் குறித்து இஸ்லாமியர்கள் அச்சம் தெரிவிப்பதாக கூறி தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர்.