June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

நாமக்கல்லில் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 மாணவர் அடித்துக்கொலை

1 min read

Plus-1 student beaten to death in Namakkal school

24.8.2024
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள நவலடிப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் ஆகாஷ் (வயது 16). இவர் வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 கணினி அறிவியல் படித்து வந்தார். நேற்று மாணவர் ஆகாஷ் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார்.
இதனிடையே இன்று (சனிக்கிழமை) பள்ளி வளாகத்தில் நடைபெற இருந்த கல்வி மேலாண்மை இயக்க நிகழ்ச்சிக்காக முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பராஜ் நேற்று ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. அதற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அவர் அழைத்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள வகுப்பறைக்கு வெளியே மாணவர் ஆகாஷ் வந்துள்ளார். அப்போது அவரின் செருப்பு காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சி அடைந்த ஆகாஷ் செருப்பை யார் எடுத்தது? எனக் கேட்டு கூச்சல் போட்டு உள்ளார்.
அப்போது அவரது நண்பரான சக மாணவர் ஒருவர், நான் தான் உனது செருப்பை எடுத்து பாதுகாப்பாக வைத்திருந்தேன், ஏன் இவ்வாறு பேசுகிறாய்? என கேட்டதாக கூறப்படுகிறது.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதோடு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் ஆகாஷை, மற்றொரு மாணவர் கடுமையாக தாக்கி உள்ளார்.
அப்போது ஆகாஷ் நிலை தடுமாறி மயங்கி விழுந்துள்ளார்.
அதைக்கண்ட சக மாணவர்கள் கூச்சலிட்டதால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் படுகாயம் அடைந்த மாணவர் ஆகாஷை மீட்டு கார் மூலம் எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மாணவரை மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ் மற்றும் எருமப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், செருப்பு காணாமல் போனது குறித்து மாணவன் ஆகாஷ் கேட்டதை தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சக மாணவர் தாக்கியதால் மயங்கி விழுந்து ஆகாஷ் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை தாக்கிய பிளஸ்-1 மாணவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் எருமப்பட்டி அருகே பிளஸ்-1 மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மாணவர் உடன் படித்த மாணவர்கள் மற்றும் அந்த பள்ளியின் ஆசிரியர்களிடம் தனித்தனியாக மாவட்ட கல்வி அலுவலர் விஜயன் விசாரணை நடத்தி வருகிறார்.
மாவட்ட கல்வி அலுவலர் விசாரணையை ஒட்டி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

உயிரிழந்த மாணவரின் உடல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடையே எதனால் மோதல் ஏற்பட்டது என்பது குறித்து எருமபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே உயிரிழந்த மாணவரின் பெற்றோர் புகார் அளிக்காததால் பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் டி.எஸ்.பி. ஆனந்தராஜ் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை தொடர்ந்து உயிரிழந்த மாணவரின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து விரைவில் பிரேத பரிசோதனை தொடங்க உள்ளது. உயிரிழந்த மாணவர் ஆகாஷை அடித்த மாணவர் உள்பட சக மாணவர்கள், கவனக்குறைவாக இருந்த தலைமை ஆசிரியர், வேதியியல் ஆசிரியர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.