புளியங்குடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
1 min read
The person who threatened the police station with a bomb was arrested
25.8.2024
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும் செவல் பகுதியில் நடைபெறும் பூலித்தேவன் விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி மீது வெடிகுண்டு வீசுவோம். என்று போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த தென்காசி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் ஒரு போன் வந்துள்ளது. அதில் பேசிய நபர், செப்டம்பர் 1ம் தேதி விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள நெற்கட்டும் செவலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தால் அவர் மீது வெடிகுண்டு வீசுவோம் என்று கூறியுள்ளார். மேலும் புளியங்குடி காவல் நிலையத்திற்கு வெடி குண்டு வைக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்து போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு
அறையில் இருந்து தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட எஸ்பி வி.ஆர். ஸ்ரீசீனிவாசன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி வெங்கடேசன் அறிவுறுத்தலின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண் சிக்னலை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த செல்போன் சிக்னல், தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் பகுதியை காட்டியதும், தனிப்படையினர் அங்கு சென்று அந்நபரை பிடித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர், தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டை பகுதியை சேர்ந்த பூசைபாண்டியன் என்பவரது மகன் வெள்ளத்துரை (வயது 32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை தென்காசிக்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரித்த போது, கடந்த ஆண்டும் இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து புளியங்குடி போலீசார், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும்
விதமாக செயல்பட்டதாக வெள்ளத்துரை மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைதுசெய்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள் நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார்
அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து தென்காசி எஸ்பி ஸ்ரீனிவாசன் கூறுகையில், இதுபோன்று பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.