டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியா தான் உலகத்துக்கே முன்னோடி- ‘விசா’ நிறுவனத்தின் துணை தலைவர் கருத்து
1 min read
India is the pioneer in the world in digital money transactions – says Vice President of ‘Visa’
26.8.2024
‘டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் அனைத்து நாடுகளுக்கும் இந்தியா தான் முன்னோடியாக திகழ்கிறது’ என்று ‘விசா’ நிறுவனத்தின் துணை தலைவர் கெல்லி மஹோன் துல்லியர் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க,வின் முக்கிய தொலைநோக்கு திட்டங்களில் ஒன்றாக இருப்பது டிஜிட்டல் இந்தியா. கடைக்கோடி கிராமங்கள் வரை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகள் சென்று சேர்ந்து விட்டன. அரசின் நலத்திட்டங்கள் முதல் பெட்டிக் கடையில் தீப்பெட்டி வாங்குவது வரை என அனைத்திலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பயன்பாட்டில் உள்ளன. முன்னேறிய நாடுகளை கூட பின்தள்ளி, இந்தியா தான் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் முன்னணியில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பற்றி கூறியுள்ள ‘விசா’ நிறுவனத்தின் துணை தலைவர் கெல்லி மஹோன் துல்லியர், இந்தியாவின் செயல்பாடுகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது:-
உலகளவில் பணப்பரிமாற்ற முறையானது அதிவேகமாக டிஜிட்டல்மயமாகி வருகிறது. அதில், உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் துறையில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளினால், இந்தியா உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் அதிகம் ஈடுபடுவதற்கு, அதில் உள்ள பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையும் காரணம்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மூலம் 50 கோடி இந்தியர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்றனர். இதுவே, இந்தியா அதிவேகமாக வளர்வதற்கு முக்கிய காரணமாகும். அதுமட்டுமில்லாமல், டிஜிட்டல் பேமன்ட்களினால் உருவாகும் வாய்ப்புகளினால் பெண்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பை கொடுக்கின்றனர். தற்போது, 55 சதவீத பெண்கள் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களில் 20 சதவீத பெண்கள் இந்தியாவில் சிறு,குறு தொழில்களில் பெண்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கட்டியெழுப்புதற்கான காரணியாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எதிர்காலத்தில் பணப்பரிவர்த்தனையில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாற அவர் தெரிவித்துள்ளார்.