விவசாயிகள் போராட்டம்: தீர்வுகாண குழு அமைத்த சுப்ரீம் கோர்ட்டு
1 min read
Farmers’ protest: Supreme Court sets up settlement committee
2/9/2024
அரியானா மாநிலம் அம்பாலா தலைநகர் டெல்லி இடையே ஷம்பு நகர் எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் போராட்டத்தை கைவிட்ட நிலையில் ஒருசில அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் மட்டும் இன்னும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும்வகையில் ஷம்பு எல்லையில் அரியானா அரசு தடுப்புகளை அமைத்துள்ளது.
அதேவேளை, நெடுஞ்சாலையில் அரியானா அரசு அமைத்துள்ள தடுப்புகளை அகற்றும்படி அரியானா – பஞ்சாப் ஐகோர்ட்டு கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், அரியானா – டெல்லி இடையே ஷம்பு எல்லையில் நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புகளை அகற்றக்கோரி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரியானா அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் போராட்டத்தை அமைதியான முறையில் மாற்று இடத்தில் நடத்த சுதந்திரம் வழங்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் பிரச்சினைகள் என்ன?, பிரச்சினைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வுகாண எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய பஞ்சாப் – அரியானா ஐகோர்ட்டு நீதிபதி நவாப் சிங் தலைமையில் குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு ஒருவாரத்திற்குள் முதல் கூட்டத்தை கூட்டி ஆய்வுகளை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.