சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்: பிரதமர் மோடி அறிவிப்பு
1 min read
Thiruvalluvar Cultural Center in Singapore: PM Modi’s announcement
5.9.2024
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கு இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்த நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்குடனான சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.
உலகம் முழுவதும் தமிழ் மொழியின் நாகரிகம், பண்பாட்டை வளர்க்கவும், பேணிக் காக்கவும் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சிங்கப்பூரில் முதல் சர்வதேச திருவள்ளுவர் கலாசார மையத்தை நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்த மையம் மூலம், திருக்குறள் சிறப்பு, தமிழ் மொழியின் இலக்கிய வளம், கலாசார சிறப்புகள் குறித்து வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, ‘சிங்கப்பூரில் தமிழ் மொழி, நாகரிகம், பண்பாடு, இவற்றை வளர்க்கவும், பேணி காக்கவும், திருவள்ளுவர் கலாசார மையம் ஒன்றை நிறுவ உள்ளதாக அறிவித்தமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.
திருவள்ளுவர் கலாசார மையம் அமைப்பதற்கு சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.