தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மறு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
1 min read
Supreme Court interim stay on re-trial of Tangam Tennarasu, Chatur Ramachandran property transfer case
6.9.2024
தமிழக அமைச்சர்களாக உள்ள தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டு அமைச்சர்களாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டு, அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து, தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தார். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், அமைச்சர்கள் இருவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை கீழமை நீதிமன்றங்கள் மீண்டும் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன், அவருடைய மனைவி ஆர்.ஆதிலட்சுமி, அமைச்சர் தங்கம் தென்னரசு, அவருடைய மனைவி டி.மணிமேகலை ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும் வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் ஐகோர்ட்டு பதிவாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.