வண்டல் மண் அள்ள ரூ.10 ஆயிரம் லஞ்சம்- பி.டி.ஓ. கைது
1 min read
Bribe of Rs.10 thousand to dig silt- B.D.O. Arrest
19.9.2024
பரமக்குடி அருகேயுள்ள நிலையம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பழனிமுருகன் (வயது 35).இவர் அங்குள்ள ஊரணியில் வண்டல் மண் அள்ள பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையாவிடம் அனுமதி ரசீது வழங்க கோரி விண்ணப்பித்து உள்ளார். ஆனால் அனுமதி ரசீதுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ரூ 10 ஆயிரம் லஞ்சமாக கேட்டு தாமதப் படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பணத்தை கொடுக்க விரும்பாத பழனிமுருகன், ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரிடம் புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் ரசாயணம் தடவிய ரூ 10 ஆயிரத்தை பழனிமுருகனிடம் கொடுத்து பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையாவிடம் கொடுக்குமாறு கூறினர்.
பின்பு பழனிமுருகன் நேற்று மாலை 7 மணிக்கு பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையிடம் ரசாயயணப் பவுடர் தடவிய ரூ 10 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.அதுசமயம் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வாளர் ராஜேஸ்வரி மற்றும் ஊழல் தடுப்புத் துறை காவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையாவை(52) கையும் களவுமாக பிடித்து கைது செய்து பணத்தை கைப்பற்றினர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த அலுவலக உதவியாளர் கண்ணனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட அரசு அலுவலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.