ஆட்டோ டிரைவர் கொலை- முத்துமாலைபுரத்தைச் சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை
1 min read
Life imprisonment for auto driver’s murder
19.9.2024
தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் சரகம் , குணராமநல்லூர் ஊராட்சி புளிச்சிகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் ஆனந்த் (வயது 41). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சுதா உடல்நல குறைவால் கடந்த 2016 ஆம் ஆண்டு இறந்து விட்டார். ஆனந்திற்கும் முப்பிலியூரைச் சேர்ந்த தர்மராஜ் மனைவி கிருஷ்ணவேணிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவனை இழந்த கிருஷ்ணவேணிக்கு ஏற்கனவே முத்துமாலைபுரத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் அசோகன் என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் தான் கள்ளத்தொடர்பு வைத்துள்ள கிருஷ்ணவேணியுடன் ஆனந்த் தொடர்பு வைத்திருப்பது பற்றி அறிந்த அசோகன் ஆவேசமடைந்து ஆனந்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் அதனை ஆனந்த் பொருட்படுத்தவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அசோகன் கடந்த ,09.07.2016 அன்று நள்ளிரவில் புல்லுக்காட்டு வலசையில் வைத்து பைக்கை கொண்டு ஆனந்த் மீது மோதி அவரை கீழே தள்ளி அரிவாளால் வெட்டியும், செங்கலால் தாக்கியும் படுகொலை செய்துள்ளார்.
இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அசோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி மனோஜ் குமார் வழக்கை விசாரணை செய்து ஆனந்தை கொலை செய்த அசோகனுக்கு (வயது 40) ஆயுள் சிறை தண்டனையும், ரூ.2000ம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சு.வேலுச்சாமி ஆஜரானார்.
இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த குற்றாலம் காவல்துறையினருக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர்
ஶ்ரீனிவாசன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.