பாலியல் குற்றச்சாட்டு: நாகை காப்பக மனநல ஆலோசகர் போக்சோ சட்டத்தில் கைது
1 min read
Sex Allegation: Nagai Sanctuary Mental Health Counselor Arrested Under POCSO Act
20.9.2024
நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையில் (அன்னை சத்யா ) அரசு காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு சுனாமியால் பெற்றோரை இழந்த பெண் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் படிக்கும் வகையில் அரசு பள்ளியும் உள்ளது. மேலும் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகள் மற்றும் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீப காலமாக மாணவிகள் மாயமாவதும், தற்கொலைக்கு முயற்சி செய்வதும் என தொடர்ந்து நடந்து வருகிறது. இதேபோல் கடந்த மாதம் 11-ம் வகுப்பு படிக்கும் 8 சிறுமிகள் மாயமாகி சென்னை சென்றுவிட்டனர்.
இது குறித்து போலீசார் விசாரணையில் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிய வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த வாரம் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அரசுத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு, குழந்தைகளின் கல்வித்தரம், பாதுகாப்புகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். பின்னர் அரசு செயலர் ஒருவர் தனியாக சென்று அங்கிருந்த குழந்தைகளிடம் விசாரணை நடத்தியதாகவும், அப்போது குழந்தைகள் காப்பகத்தில் பணியாற்றி வரும் மனநல ஆலோசகர் உள்ளிட்ட 2 பேர் மீது சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த அரசு செயலர் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து காப்பக கண்காணிப்பாளர் சசிகலா நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் நிலைய அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு, காப்பக மனநல ஆலோசகரான நாகை பெருமாள் கோவில் மேல வீதியைச் சேர்ந்த சாமுவேல் தாஸ் மகன் சத்தியபிரகாஷ் (வயது 43), என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது சம்பந்தமாக மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.