ஹேக் செய்யப்பட்ட சுப்ரீம் கோர்ட்டின் யூடியூப் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது
1 min read
The hacked Supreme Court’s YouTube page is back in action
21.9.2024
சுப்ரீம் கோர்ட்டின் வழக்குகள் மற்றும் விசாரணைகளை ஒளிபரப்புவதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் யூடியூப் சேனலை, ரிப்பிள் என்ற பெயரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று ஹேக் செய்தனர். ஹேக் செய்யப்பட்டிருக்கும் சுப்ரீம் கோர்ட்டின் யூடியூப் பக்கத்தில், கிரிப்டோகரன்சி குறித்து விளம்பரப்படுத்தப்படும் தகவல்கள் இடம்பெற்று இருந்தது. அதாவது, அமெரிக்காவை சேர்ந்த ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் வீடியோக்கள் அதில் இணைக்கப்பட்டிருந்தது.
யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டதால் நேற்று சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை நேரலை பாதிக்கப்பட்டது. முடக்கப்பட்ட யூடியூப் பக்கத்தை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். அதேவேளையில், யூடியூப் பக்கத்தை முடக்கிய நபர்கள் குறித்து விசாரணை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஹேக் செய்யப்பட்ட சுப்ரீம் கோர்ட்டின் யூடியூப் பக்கம் மற்றும் வழக்கு விசாரணை நேரலை ஆகியவை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. யூடியூப் பக்கத்தில் இருந்த அனைத்து வழக்குகளின் விசாரணை வீடியோக்களும் தற்போது மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.