குற்றாலம் சர்வோதய சங்க கடையில் பல லட்சம் மோசடி- சி.பி.எம். கலெக்டரிடம் புகார்
1 min read
Multi-lakh fraud at Courtalam Sarvodaya Sangh shop- C.B.M. Complaint to the Collector
26.9.2024
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சங்கரன்கோவில் சர்வோதய சங்கம் கடை இயங்கி வருகிறது. மேற்படி நிறுவனத்தின் மூலம் அரசு அலுவலகங்களுக்கு தேவையான பொருட்கள், மருத்துவமனைக்கு தேவையான பொருட்கள் பொதுமக்கள் தேவையான தரமான பொருட்கள் வாங்கி பயன் பெற்று வந்தனர்.
இந்நிலையில் 2019-2020, 2021-2022, 2023-2024 ஆகிய ஆண்டுகளில் மேற்படி நிறுவனத்தில் சரக்குகள் விற்பனை செய்ததில் பல லட்சம் மோசடி நடந்துள்ளது. சங்கத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் செய்யமால் அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில் அன்னதான திட்டத்திற்கு குற்றாலம் கதர் கடையில் மூலம் 20 இலட்சத்திற்கு மேல் பொருள்கள் சப்ளை செய்ததாக போலி பில்கள் மூலமாக குற்றாலம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் செங்கோட்டை நகரத்தை சார்ந்த ஆர்.ஏ. ஸ்டோர் உரிமையாளரும் இணைந்து ஊழல் செய்து உள்ளனர். சர்வோதயா சங்கத்தில் உற்பத்தி இல்லாத பொருட்களை வாங்கி விற்பனை செய்ததன் மூலம் நிதி மோசடி நடந்துள்ளது.
தென்காசி, கடையநல்லூர் அரசு மருத்துவமனைகளுக்கும், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு விற்கப்பட்ட பொருட்களுக்கு கடன் பேரேடில் கையெழுத்து வாங்காமல் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு விற்கப்பட்ட பொருட்களுக்கு அதற்கான தொகையை காசோலையாக வாங்காமல் ரொக்கமாக பணத்தை வாங்கியதன் மூலம் நிதி மோசடி நடைபெற்றுள்ளது.
இந்த சர்வோதயா சங்கத்தில் போலியாக பில் மற்றும் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு இதன் மூலம் மட்டும் 60 லட்சம் வரை கணக்கில் வராமல் விற்பனை நடந்துள்ளதாக தெரிகிறது.
5 ஆண்டு காலம் தொடர்ச்சியாக இந்த தில்லு முல்லு வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள் மேற்படி நிறுவனத்தில் ஆண்டு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியாக உள்ளது.
பொது நிறுவனத்தில் நிதி மோசடி ஈடுபட்டு சர்வோதய சங்கத்தின் நன்மதிப்பை சீர்குலைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட ஊழல் சம்பந்தமாக தென்காசி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் விரைவில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் உ.முத்து பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கணபதி, பி.வேலுமயில், பி.உச்சிமாகாளி ஆகியோர் கலந்து கொண்டனர்.