நாமக்கல் அருகே தப்பிஓடிய கொள்ளையன் சுட்டுக்கொலை
1 min read
A fugitive robber shot dead near Namakkal
27.9.2024
கேரள மாநிலம் திருச்சூரில் நேற்றைய தினம் ஏ.டி.எம். இயந்திரத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த சில நபர்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டு ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பிச் செல்வதாக நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம் சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றுள்ளது. மேலும் அந்த லாரி சாலையோரம் நின்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சினிமா பாணியில் போலீஸ் வாகனங்களைக் கொண்டு லாரியை துரத்திச் சென்ற போலீசார், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஈரோடு செல்லும் சாலையில் உள்ள அம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே கண்டெய்னர் லாரியை மடக்கிப் பிடித்தனர்.
லாரியில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்ததால், மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார், கண்டெய்னர் லாரியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வனப்பகுதிக்கு கொண்டு சென்று சோதனை செய்தனர். அந்த லாரிக்குள் கட்டுக்கட்டாக பணம் மற்றும் சொகுசு கார் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் லாரியின் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற நபரை போலீசார் சுட்டுக்கொலை செய்தனர்.
மேலும் ஹரியான மாநிலத்தை சேர்ந்த அசர்அலி என்பவரின் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
இதனையடுத்து மற்ற கொள்ளையர்களையும் மடக்கி பிடித்த போலீசார், வெப்படை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அசர்அலியை மீட்ட போலீசார், பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர்.அதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அசர்அலியை கொண்டு வந்தனர். அங்கு துப்பாக்கி குண்டு பாய்ந்த பகுதியை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்தனர்.
பின்னர் மருத்துவமனையில் உள்ள ரெட் ஜோன் பிரிவில் அசர் அலி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனைக்குள் சென்றுள்ள போலீசார், அசர்அலியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அசர்அலியின் காலில் தொடர்ந்து ரத்தம் வெளியேறி வருவதால், மேல்சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து சென்றனர்.