ஆய்குடி-ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை
1 min read
Ayikudi- 3 members of the same family committed suicide by drinking poison
28.9.2024
தென்காசி அருகே ஆய்குடி கம்பிளி பகுதியை சேர்ந்தவர் பரமசிவன்(வயது 70). இவரது மனைவி சுடலை மாடத்தி(65). இவர்களது மகன் முருகேசன்(50). பரமசிவனும், சுடலைமாடத்தியும் அதே பகுதியில் உள்ள ஒரு தோப்பில் தங்கியிருந்தனர். முருகேசன் தனது மனைவி, மகன், மகள் மற்றும் மருமகளுடன் கம்பிளி மெயின்ரோட்டில் வசித்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் ஒரு விபத்தில் சிக்கியதில் அவருக்கு மனநலம் சற்று பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தனது பெற்றோர் வசிக்கும் தோப்பிற்கு சென்ற முருகேசன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் முருகேசன் குடும்பத்தினர் தனது தாத்தா-பாட்டி வசிக்கும் தோப்பிற்கு சென்று பார்த்தபோது அங்கு பரமசிவன், முருகேசன், சுடலைமாடத்தி ஆகியோர் குருணை மருந்தை வாழைப்பழத்தில் தடவி சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து ஆய்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்த சென்று 3 பேர் உடலையும் கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்த தோப்பில் அமைந்திருந்த பரமசிவன் வீட்டுக்குள் சென்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள கட்டிலில் வைக்கப்பட்டிருந்த தலையணையை எடுத்து பார்த்தபோது, அதன் கீழே ரூ.50 ஆயிரம் பணம் இருந்தது. தாங்கள் இறந்தால் தங்களின் இறுதிச் சடங்கிற்கு செலவு செய்வதற்காக அந்த பணத்தை அவர்கள் விட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஆய்க்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெற்றோர், மகன் ஆகிய 3 பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதோடு மட்டுமின்றி இறுதிச்சடங்கிற்கு ரூ.50 ஆயிரம் பணத்தையும் விட்டுச் சென்றது அவர்களது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.