32 ஆண்டுகளாக ஹிஸ்புல்லா இயக்க தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்
1 min read
Hassan Nasrallah, the leader of Hezbollah for 32 years, was killed
29.9.2024
லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து கடந்த வாரம் முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 700 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நேற்று தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் தஹியாபகுதியில் அமைத்துள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் உட்பட குடியிருப்பு கட்டடங்கள் மீது இஸ்ரேல் 80 டன்கள் அளவிலான வெடிபொருட்களுடன் பயங்கர வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தாக இஸ்ரேல் அறிவித்திருந்தது. ஆனால் ஹிஸ்புல்லா தரப்பில் எந்த தகவலும் கூறப்படாமல் இருந்த நிலையல் தற்போது தலைவர் நசரல்லா உயிரிழந்ததாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், நஸ்ரல்லா சக உயிர் தியாகிகளோடு இணைந்துள்ளார். லெபனான் மக்களின் நலனுக்காகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் தங்களின் எதிரி மீதான புனிதப் போரை நாங்கள் தொடருவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நஸ்ரல்லா கொலைக்கு ஹமாஸ் அமைப்பு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மக்கள் வாழும் குடியிருப்பு கட்டடங்களைக் குறிவைக்கும் கோழைத்தனம் பயங்கரவாத செயல் இது. இந்த சியோனிச காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிக்கிறோம். இந்த வேளையில் ஹிஸ்புல்லா சகோதரர்களுடனும் லெபனானுடனும் நிற்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இஸ்ரேலின் வல்லாதிக்கத்தினால் பலஸ்தீனத்திலும், லெபனானிலும் ரத்தம் சிந்தப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகள் தங்களின் மவுனத்தைக் கலைத்து இஸ்ரேலுக்கு எதிராக செயலாற்றியாக வேண்டும். சகோதரத்துவம் கொண்ட லெபனான் மக்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று ஹமாஸ் தலைவர் யாஹோவா சின்ஹார் அழைப்பு விடுத்துள்ளார்.
ஹிஸ்புல்லா இயக்க தலைவராக 32 ஆண்டுகளாக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேலுக்கு கடும் சவாலாக விளங்கினார்.
1960-ம் ஆண்டு பெய்ரூட்டின் கிழக்கு போர்ஜ் ஹம்மூத் பகுதியில் பிறந்தவர். அவரது தந்தை காய்கறி கடை நடத்தி வந்தார். ஹசனின் இளமைக் காலத்தில் லெபனான் உள்நாட்டு போரில் சிக்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து லெபனானை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது.
இதையடுத்து இஸ்ரேலை வீழ்த்த ஹிஸ்புல்லா இயக் கம் உருவாக்கப்பட்டது. இதில் ஹசன் நஸ்ரல்லா இணைந்தார். 1992-ம் ஆண்டு அப்போதைய ஹிஸ் புல்லா தலைவராக இருந்த அப்பாஸ் அல்-முசாவி, இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் அந்த இயக்கத்துக்கு தனது 32-வது வயதில் ஹசன் நஸ்ரல்லா தலைவரானார்.
தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகளுடனான போரை நஸ்ரல்லா தொடர்ந்து முன்னின்று நடத்தினார். அங்கிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின் வாங்கியதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு எதிரான முதல் அரபு வெற்றியை ஹெஸ்பொலா அடைந்து விட்டதாக நஸ்ரல்லா அறிவித்தார்.
மத்திய கிழக்கில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஈரானுடன் நெருக்கமான தொடர்பு களைக் கொண்ட அவர் அதுமட்டுமல்லாது ஹிஸ்புல்லாவை ஒரு அரசியல் மற்றும் ராணுவ சக்தியாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
அவரது தலைமையின் கீழ், பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் மற்றும் ஈராக், ஏமனில் உள்ள போராளிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்த, ஈரானிடம் இருந்து ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளையும் பெற்றார். ஹிஸ்புல்லா இயக்கத்தை, லெபனான் ராணுவத்தை விட வலிமையான ஒரு படையாக மாற்றினார்.
லெபனான் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் ஹிஸ்புல்லா இயக்கம் சுகாதாரம், கல்வி மற்றும் சமூக சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.