கனமழையால் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை
1 min read
Due to heavy rain bathing in Kurdalam waterfalls is prohibited
30.9.2024
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், பல்வேறு பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் தற்போது தண்ணீரானது அதிக அளவில் கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீரானது தற்பொழுது ஆர்ப்பரித்துக் கொண்டு கொட்டி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது மழை குறைந்துள்ள நிலையில், தண்ணீரின் அளவு அருவிகளில் குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.