June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

அமைச்சரவையில் உதயநிதி 3-வது இடத்திற்கு முன்னேற்றம்

1 min read

Udhayanidhi advances to 3rd position in cabinet

30.9.2024

தமிழக அமைச்சர்களுக்கான சீனியாரிட்டி பட்டியலில், துணை முதல்வர் உதயநிதிக்கு 3ம் இடம் அளிக்கப்பட்டு உள்ளது; துரைமுருகன் இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளார்.

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட துணை முதல்வர் பதவியேற்பு நேற்று நடந்துள்ளது. அத்துடன், தமிழக அமைச்சரவையும் மாற்றி அமைக்கப்பட்டது. 4 அமைச்சர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் ஆகிய இருவர் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள். புதியவர்களாக கோவி. செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், அமைச்சரவையில் எந்த அமைச்சருக்கு எத்தனையாவது இடம் என்ற சீனியாரிட்டி பட்டியலை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
அதில் முதலிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர் கையாளும் துறைகள் என்ன என்பது பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 2வது இடம் கட்சியின் சீனியரும், நீர்வள அமைச்சருமான துரைமுருகனுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
3வது இடம் துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்து தான் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு என மற்ற அமைச்சர்களுக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், என்னை சந்திக்க வர வேண்டாம் நானே நேரில் வருகிறேன் என்று தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன்.

எனினும், நம் கழகத்தலைவர் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி – கழகப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.

என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கழக உடன் பிறப்புகள் தவிர்க்குமாறு அன்போடும் – உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.