June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தொழில் முதலீடு விசயத்தில் தமி்ழக அரசு பொய் சொல்கிறது- அன்புமணி குற்றச்சாட்டு

1 min read

Tamil Govt is lying about business investment – Anbumani alleges

4.10.2024
தொழில் முதலீடுகள் விவகாரத்தில் ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்களை தமிழக அரசு கூறுவதாக பா.ம.க., தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாட்டில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 46 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. தி.மு.க., ஆட்சியில் தொழில்துறையில் எவரெஸ்ட் சிகரத்தை தொடும் அளவுக்கு சாதனைகளை படைக்கப்பட்டிருப்பதாக முதல்வர்.ஸ்டாலின் கூறி வந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டிருக்கும் இந்த புள்ளி விவரங்களின் மூலம் உண்மை நிலை அம்பலமாகியுள்ளது.
செப்டம்பர் 23ம் தேதி தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் இதுவரை கையெழுத்திடப்பட்ட 891 தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 535 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு விட்டன; அவற்றில் 234 திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்கி விட்டதாகவும், 301 தொழில் திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தார். ஆனால், தி.மு.க., அரசு நேற்று வெளியிட்ட சாதனை அறிக்கையில் புள்ளிவிவரங்கள் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளன. இதுதான் தி.மு.க., அரசின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தியுள்ளன.
2021ம் ஆண்டுக்குப் பிந்தைய 3 ஆண்டுகளில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.17,616 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட 19 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதாக அரசு கூறியிருக்கிறது. இது உண்மை. ஆனால், அதற்கு முன்பாக 27 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதாக அரசு கூறியிருப்பது மோசடி. அந்தத் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை அ.தி.மு.க., ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் மூலம் அமைக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் இருந்தவை. அவை தி.மு.க., ஆட்சியில் முதலீடு ஈர்க்கப்பட்டவையாக இருந்தால் அவற்றின் மதிப்பு என்ன? அந்தத் தொழிற்சாலைகளை எங்கெங்கு அமைக்கப்பட்டு உள்ளன? என்ற விவரங்களை வெளியிட்டிருக்கலாம். ஆனால், அந்த விவரங்களை வெளியிடவில்லை. இதன் மூலம் தனது மோசடியை தி.மு.க., அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது.
அதேபோல், சென்னையில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 28 மட்டுமே. அதன்பிறகு செப்டம்பர் 28ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் டாட்டா நிறுவனத்தின் ஜாகுவார் மகிழுந்து ஆலையை முதல்வர் அடிக்கல் நாட்டி வைத்தார். அதையும் சேர்த்தால் தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் புதிதாக அடிக்கல் நாட்டப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 29 மட்டும் தான். ஆனால், 301 தொழில்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியிருக்கிறார். அமைச்சரின் கூற்று அப்பட்டமான பொய் என்பதைத் தவிர வேறில்லை.
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தொழில் திட்டங்களின் எண்ணிக்கை 500% உயர்த்திக் கூறுகிறார் அமைச்சர். அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கையை 1000%க்கும் கூடுதலாக உயர்த்திக் கூறுகிறார் தொழில்துறை அமைச்சர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தொழில் முதலீடுகளைக் கொண்டு தமிழகத்தை வளர்க்க தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை; மாறாக, பொய் முதலீடுகளைக் கொண்டு தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வதில் மட்டும் தான் அரசு தீவிரம் காட்டுகிறது. இந்த பொய்களை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள்.

ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்களை சொல்ல வேண்டியிருக்கும் என்பார்கள். தமிழக அரசும் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறது. பொய்களால் கட்டப்பட்ட கோட்டை நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. எனவே, தமிழக அரசு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து இருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் படுதோல்வி அடைந்து விட்டதை ஒப்புக்கொண்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும.

இவ்வாறு தமது அறிக்கையில் அன்புமணி கூறி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.