இயற்கை வளங்களை பாதுகாக்க கோரி 23-ந் தேதி முற்றுகை-ரவிஅருணன் அறிவிப்பு
1 min read
Blockade-Ravi Arunan announcement on 23rd to protect natural resources
19.10.2024
இயற்கை வள பாதுகாப்பு சங்க தலைவர் கே.ரவிஅருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்திலிருந்து கனிம வளங்கள் கேரளாவிற்கு 22 மற்றும் 18 சக்கர வாகனங்களில் 6 யூனிட் பாஸ் வைத்துக்கொண்டு இரண்டு யூனிட் அதிகமாக பாரம் ஏற்றிக்கொண்டு செல்லப்படுகிறது
நமது மாவட்டத்தில் ஒரு யூனிட் எம். சாண்ட் விலை 3 ஆயிரம் ரூபாய். ஆறு யூனிட் ரூ. 18 ஆயிரம்.
திருவனந்தபுரம் நகருக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல டீசல், டிரைவர் படி, தேய்மானம், மாமுல் மற்றும் இதர செலவுகள் உட்பட ரூ.15 ஆயிரம் செலவாகிறது. ஆக மொத்த செலவு ரூ.33 ஆயிரம்.
திருவனந்தபுரத்தில் ஒரு யூனிட் எம். சாண்ட் விலை ரூ 14 ஆயிரம். ஆறு யூனிட் எம் சாண்ட் மூலம் ரூ84 ஆயிரம் கிடைக்கின்றது.
ஒரு லாரியில் ஒரு லோடு மூலம் செலவு போக 51 ஆயிரம் ரூபாய் சுளையாக லாபம் கிடைக்கின்றது.
அதிகமாக ஏற்றி செல்லும் ரெண்டு யூனிட் எம் சாண்டிற்கு கூடுதலாக கிடைக்கின்றது. அதை நாம் கணக்கில் கொள்ளவில்லை.
தென்காசி மாவட்டம் புளியரை வழியாக மட்டும் தினசரி ஆயிரம் வாகனங்கள் கேரள மாநிலத்திற்கு செல்கின்றன. இதைத் தவிர கன்னியாகுமரி, தேனி, கோயம்புத்தூர், ஓசூர் வழியாக தமிழகத்தில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கனிம வளங்களை ஏற்றி செல்கின்றது.
இந்த லாபத்தில் கிடைக்கின்ற தொகையில் தான் தமிழகத்தில் ஆளுகின்ற அரசியல்வாதிகளுக்கும் அரசின் தவறுகளை தட்டி கேட்கின்ற (?) எதிர்க்கட்சிகளுக்கும் சில ஊழல் அதிகாரிகளையும் கனிம வள கொள்ளையர்கள் கையில் போட்டுக் கொண்டு இந்த கனிமவள கொள்ளை நடந்து வருகிறது.
வெளிமாநிலங்களுக்கு செல்லும் கனிம வளங்களுக்கு மாநில அரசே வரி விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியும் தமிழக அரசு வரி விதிக்காமல் தாமதித்து வருகின்றது.
ஒரு யூனிட்டுக்கு ரூ.8000 வரி விதித்தால் தான் கனிம வள கொள்ளை முடிவுக்கு வரும்.
ஆகவே இதையெல்லாம் தட்டிக் கேட்க தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்க வரும் 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பாக நடத்தப்படும் முற்றுகை போராட்டத்திற்கு அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.