நாங்குநேரி அருகே அரசு பஸ்-மினிலாரி மோதியதில் டிரைவர் உள்பட 2 பேர் பலி
1 min read
2 people died in a collision between bus and a mini-lorry near Nanguneri
25.10.2024
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒரு மினி லாரி ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அதனை நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள படலையார்குளம் ஜே.ஜே. நகரை சேர்ந்த சுடலை மகன் மகேஷ் (வயது 20) என்பவர் ஓட்டிச்சென்றார்.
இன்று அதிகாலையில் அந்த மினிலாரி நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு நான்குவழி சாலையில் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் மூன்றடைப்பு பாலத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது எதிரே வந்த மினிலாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பஸ்சின் முன் பகுதி கண்ணாடி உடைந்தது. அதே நேரத்தில், மினிலாரியின் முன்பக்க பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் மினி லாரி டிரைவரான மகேஷ், முதலை குளத்தை சேர்ந்த உசிலவேல் (36) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இடிபாட்டில் சிக்கி உடல் நசுங்கி பலியாகினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த மூன்றடைப்பு போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று இடிபாட்டில் சிக்கியிருந்த 2 பேரின் உடல்களையும் கடும் போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து காரணமாக ரெயில்வே மேம்பாலத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சம்பவம் நடந்த பகுதியில் ரெயில்வே மேம்பால சாலை பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் மட்டும் நான்குவழிச்சாலையின் ஒரு பகுதி அடைக்கப்பட்டு 2 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் தான் விபத்து நடந்துள்ளது.
திருவனந்தபுரத்திற்கு லோடு ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரி டிரைவர் சற்று கண் அயர்ந்து இருக்கலாம். அதனால் தான் இந்த விபத்து நடந்திருக்க கூடும் என்று போலீசார் தெரிவித்தனர்.