கூகுள் பே, போன் பே மூலம் லஞ்சப்பணம் வசூல்; போலீசார் விசாரணை
1 min read
Collecting bribes through Google Pay, Phone Pay; Police investigation
26.10.2024
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் அதிகாரிகள் ஜிபே, போன்பே மூலம் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
கோத்தகிரியில் நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் அனுபோக சான்று உள்ளிட்டவை பெறுவதற்கு புரோக்கர்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக புகார் உள்ளது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்ற தகவலின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி தலைமையில், 24ம் தேதி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலக கதவுகளை மூடிய அதிகாரிகள், தாசில்தார், வி.ஏ.ஓ.,கள், அலுவலக ஊழியர்களிடம், தனித்தனியாக விசாரணை நடத்தி, சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
சோதனையின்போது, கோத்தகிரி கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) கமல் என்பவரிடம் இருந்து ரூ.6 ஆயிரம், ஜெகதளா -1 வி.ஏ.ஓ. நவீன்குமாரிடம் இருந்து ரூ.4,200 பறிமுதல் செய்யப்பட்டது. இவை கணக்கில் வராத பணம்.
மேலும், தாசில்தார், துணை தாசில்தார், உதவியாளர்கள், வி.ஏ.ஓ.,க்களின் மொபைல்போன்கள் வாங்கி அதில் இருந்து ஜிபே, போன்பே, வாட்ஸ் ஆப் செயலியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் விவரம் வருமாறு:
தாசில்தார் கோமதி, ஜிபே மூலம், ஜூன் 6 முதல் அக்., 11 வரை ரூ.4,91,000 லஞ்சம் பெற்றதற்கான 33 பதிவுகள் இருந்தன. இவருக்கு மதுரையில் எஸ்.பி.ஐ., கிளையிலும், கனரா வங்கியிலும், இந்தியன் வங்கியிலும் சேமிப்பு கணக்கு உள்ளது.
துணை தாசில்தார் எல்.கே.உமா மகேஸ்வரி, போன் பே மூலம் மே 30 முதல் செப்., 24 வரை வங்கிக்கணக்கிற்கு வெவ்வேறு நபர்களிடம் இருந்து ரூ.1,28,000 லஞ்சப்பணம் பெற்றதற்கான பதிவுகள் இருந்தது.
கோத்தகிரி 2 வி.ஏ.ஓ., கமல், போன்பே மூலம் ஜூன் 10 முதல் அக்.,08 வரை ரூ.22,800 லஞ்சம் வாங்கியதற்கான பதிவுகள் இருந்தது.
அரக்கோடு, கொக்கோடு வி.ஏ.ஓ., பிரியா, ஜிபே மூலம் ஜூன் 22 முதல் அக்.,19 வரை இவரது வங்கிக்கணக்கிற்கு வெவ்வேறு நபர்களிடம் இருந்து ரூ.54,750 லஞ்சம் பெற்றதற்கான பதிவுகள் இருந்தது.
இந்த தகவல்கள் அனைத்தையும் பதிவிறக்கம் செய்து விசாரணைக்கு அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். மேலும், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.