மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: கவர்னர் பங்கேற்பு
1 min read
Manonmaniam Sundaranar University Convocation: Governor participates
26.10.2024
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக 31-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி அரங்கில் நடைபெற்றது.
விழாவுக்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி தங்க பதக்கங்கள் பெற்ற 111 பேருக்கும், முனைவர் பட்டங்கள் பெற்ற 460 பேருக்கும் என மொத்தம் 571 பேருக்கு நேரடியாக படங்களை வழங்கினார்.
விழாவில் 33 ஆயிரத்து 821 பேர் பட்டங்கள் பெறுகின்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் ஆண்டறிக்கையை பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் வாசித்தார்.
தொடர்ந்து தேசிய புவி அறிவியல் துறை இயக்குனர் சலபதி ராவ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:-
புதிய கல்வி கொள்கை உலக அரங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் உள்ள மாணவர்களும் இந்தியாவில் வந்து கல்வி கற்கும் வகையில் இந்திய கல்வித்தரம் உயர்ந்துள்ளது.
இந்திய கல்வி அமைப்பு மிகப்பெரும் மேம்பாட்டை அடைந்துள்ளது. குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி பெறும் வகையில் கல்வி அமைப்பு நாட்டில் செயல்படுகிறது. உயர் கல்வியில் தொடர்ந்து இந்தியா மேம்பட்டு வருகிறது.
இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா 2047-ம் ஆண்டு கொண்டாடும் போது உலக அளவில் சமுதாய வளர்ச்சி, பொருளாதாரம் போன்றவைகளில் சூப்பர் பவர் என்ற நிலையில் உலக அளவில் இந்தியா அடையும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கோவி.செழியன் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். முன்னதாக தங்கப் பதக்கங்கள் பெற்ற மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.
விழாவில் தங்கப்பதக்கம் பெற்ற 111 பேரில் 97 பேர் பெண்கள் ஆவர். அதே போல் முனைவர் பட்டம் பெற்ற 460 பேரில் 377 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்கலைகழகங்களில் முனைவர் பட்டம் பெறுபவர்களில் 337 பெண்கள் இடம் பெற்றிருப்பதும், அதிகளவிலான பெண்கள் முனைவர் பட்டம் பெற்றதும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.