பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
1 min read
At Pasumpon, Muthuramalingath Devar Guru Puja: Courtesy of Chief Minister M.K.Stal
30.10.2024
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாள் மற்றும் 62 வது குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முத்துராமலிங்கத் தேவரின் உருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்திய விடுதலைப் போருக்காக தன்னையே ஒப்படைத்துக்கொண்டு உழைத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரன் நினைவிடத்தில் இன்றைய தினம் (அக்.30) நான் மரியாதை செலுத்தியிருக்கிறேன். இந்நேரத்திலே பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், தேவர் திருமகனாரைப் பற்றி பெருமைப்படுத்தி குறிப்பிட்டுச் சொன்னதை நான் சொல்ல விரும்புகிறேன்.
“அன்றைய அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் ஒருமித்த இளவல் போன்று, கம்பீரமாகக் காட்சி அளித்தார் தேவர் திருமகன்”-என்று பேரறிஞர் அண்ணா அவரைப் பாராட்டியிருக்கிறார்.
“வீரராக பிறந்தார்; வீரராக வாழ்ந்தார்; வீரராக மறைந்தார்; மறைவுக்குப் பிறகும் வீரராக போற்றப்படுகிறார்” என்று தலைவர் கலைஞர் அவரைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார். அத்தகைய தியாகியை போற்றும் அரசாக, திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
பசும்பொன்தேவரைப் போற்றி திமுக அரசு செய்திருக்கக்கூடிய பல்வேறு செயல்பாடுகளில் சிலவற்றை நான் உங்களிடத்தில் குறிப்பிட்டு காட்ட விரும்புகிறேன்.
மதுரை மாநகரில் வெண்கலச் சிலை, பசும்பொன் மண்ணில் நினைவில்லம், வேலை வாய்ப்புகளில் 20 சதவீதம் ஒதுக்கீடு,
மேல்நீலிதநல்லூர் – கமுதி, உசிலம்பட்டி ஆகிய 3 இடங்களில் அரசு
கலைக் கல்லூரிகள், மதுரை ஆண்டாள்புரத்தில், முத்துராமலிங்கத் தேவர் பாலம என்று பெயரிட்டோம்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கல்வி அறக்கட்டளை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினருக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 20 சதவீதம் ஒதுக்கீடு. கடந்த 2007-ஆம் ஆண்டு நூற்றாண்டு விழாவை மிக எழுச்சியுடன் நாம் கொண்டாடியிருக்கிறோம். திருமகனார் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. விழாவை அடையாளம் காட்டக்கூடிய வகையில் வளைவு அமைக்கப்பட்டிருக்கிறது. அணையா விளக்கும் நாம் அமைத்திருக்கிறோம். நூலகக் கட்டடம் பால்குடங்கள் வைப்பதற்கு மண்டபம் முளைப்பாரி மண்டபம் என்று பசும்பொன்தேவர் திருமகனாருக்குப் புகழ் சேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றியிருக்கிறோம்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு குரு பூஜை நடத்தியிருக்கிறோம். பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் செய்துள்ளது.
பசும்பொன் தேவரின் பிறந்தாள் விழாவின்போது ஏற்படும் கூடும் நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், மழை வெயிலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும் ரூ.1 கோடியே 55 லட்சம் செலவில் புதியதாக அமைக்கப்பட்ட உமுத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை அக் 28ல் திறந்து வைத்திருக்கிறோம்.
இதுபோன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் போற்றும் செயல்களையும், திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம். அவரது புகழ் வாழ்க! வாழ்க! என்று இந்த நேரத்தில் குறிப்பிட்டு கூறிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினர்.
கேள்வி- பிஜேபி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. மீனவர்களின் கைது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அது பற்றி..
முதலமைச்சர் பதில் : தொடர்ந்து நாங்கள் கடிதம் எழுதிக்கொண்டு இருக்கிறோம். டெல்லிக்கு நான் செல்லும் போதெல்லாம் பிரதமரிடம் பேசியிருக்கிறேன். வெளியுறவுத் துறை அமைச்சரிடத்திலும் இதை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறோம். அவர்களும் அவ்வப்போது. நாங்கள் எழுதக்கூடிய கடிதத்திற்கு நடவடிக்கை எடுத்து. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும், இது தொடர்ந்து இருந்துவருகிறது.
இதுபோன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் போற்றும் செயல்களையும் திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம்!
எனவே அவரது புகழ் வாழ்க! வாழ்க! என்று இந்த நேரத்தில் குறிப்பிட்டு கூறிக்கொள்கிறேன்.
கேள்வி -கலைஞர் தொடங்கிய தேவர் கல்லூரியில் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக…
முதலமைச்சரின் பதில் : அதற்கு தொடர்ந்து நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறோம். இப்போது கூட 12 பேருக்கு பணி நியமனம் வழங்கியிருக்கிறோம். உரிய நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும்.
கேள்வி : காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் கடந்த 60 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கிறது அதுபற்றி…
முதலமைச்சரின் பதில் : 2008 ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தான் காவிரி குண்டாறு திட்டத்தின் முதற்கட்டப் பணி கதவனையிலிருந்து துவக்கப்பட்டது. அதன் பிறகு வந்த அதிமுக ஆட்சியில் 9 ஆண்டு காலம் அதை கிடப்பில் போட்டுவைத்திருந்தார்கள். கடைசி
வருடத்தில் தான் அதை செய்யப்போகிறோம் எனும் அறிவிப்பை வெளியிட்டு தொடர்ந்தார். அதையும் கோவிட் பெருந்தொற்று வந்த காரணத்தால் கிடப்பில் போடப்பட்டது. இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அந்தப் பணிகளை துரிதப்படுத்தி தற்போது 40 சதவீதம் வரை நில எடுப்பு பணிகள் முடிந்துள்ளது. தொடர்ந்து அந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், பால்வளம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.,ராம. கருமாணிக்கம் உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உடன் இருந்தனர்.