விழுப்புரம், திண்டிவனத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை; மு.க.ஸ்டாலின் பேட்டி
1 min read
M.K. Stalin says he doesn’t expect rain in Villupuram and Tindivanam
1.12.2024
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, மருந்து இருப்பு விவரங்களை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து பொது மக்களிடமும் குறைகளையும் கேட்டறிந்தார். இதனையடுத்து கொளத்தூரில் ஆய்வு செய்த பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தலைநகரம் தப்பிக்கவும் இல்லை, தத்தளிக்கவும் இல்லை. பெரிய அளவில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. சென்னை தலைநகரம் நிம்மதியாக இருக்கிறது. தண்ணீர் தேங்கிய பழைய வீடியோக்களை பரப்பி வருகின்றனர். மக்கள் பாதுகாப்பாக உள்ளனர், தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வானிலையை ஓரளவுக்குதான் கணிக்க முடியும். புயலின் வேகம் குறைந்து ஒரே இடத்தில் நிற்பதை எப்படி கணிப்பது? திடீரென மாறி விடுகிறது. வானிலை மையம் கொடுக்கும் தகவல் அடிப்படையில்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
விழுப்புரம், திண்டிவனத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை. விழுப்புரம், திண்டிவனம், மரக்காணத்தில் 60 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. விழுப்புரம், மரக்காணம், கடலூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்துள்ளதால் பாதிப்புகளை ஆய்வு செய்ய துணை முதல்-அமைச்சர் செல்ல உள்ளார்.விழுப்புரத்திற்கு அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.