இளங்கோவன் உடலுக்கு 2-வது நாளாக முதல்-அமைச்சர் நேரில் அஞ்சலி
1 min read
Chief Minister M.K. Stalin pays tribute to E.V.K.S. Elangovan for the 2nd day
15.12.2024
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு (வயது 75) கடந்த மாதம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (14.12.2024) காலை 10:12 மணியளவில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் மணப்பாக்கம் இல்லத்தில் நேற்று வைக்கப்பட்டிருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆறுதல்களைத் தெரிவித்தார். அப்போது துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ. அன்பரசன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, கோவி. செழியன், ம.தி.மு.க. பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் இன்று பிற்பகல் வரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இல்லத்திற்கு இன்று 2-ஆவது நாளாக நேரில் சென்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குடும்பத்தினருக்குத் தனது ஆறுதல்களை தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ. அன்பரசன், மா. சுப்பிரமணியன், சு. முத்துசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இன்று (15.12.2024) மாலை அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெற்றது.