தடையை மீறி பா.ஜ.க. மகளிரணி நீதியாத்திரை நடத்த முடிவு
1 min read
BJP decides to hold Mahila Rani Justice March despite ban
2.1.2025
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொமை அத்துமீறலை கண்டித்து அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொமை விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகளை மறைக்க முயலும் தி.மு.க. வைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும் பா.ஜ.க. மகளிரணியினர் மதுரையில் இருந்து 3-ந் தேதி சென்னை வரை நீதிப் பேரணி நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். இந்த பேரணிக்கு மகளிரணி மாநில தலைவி உமாபாரதி தலைமை தாங்குகிறார்.
மதுரையில் இந்த வாகன பேரணி நாளை (3-ந்தேதி) காலை 10.30 மணிக்கு மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோவில் அருகில் இருந்து தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகை ராதிகா, பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.
இந்த வாகன பேரணி சென்னையில் நிறைவடையும் போது தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வரவேற்று, பின்னர் கவர்னரை சந்தித்து மனு கொடுக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் கூறுகையில், மதுரையில் நாளை தொடங்கும் மகளிர் அணி நீதி யாத்திரை பேரணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக போலீஸ் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனாலும் திட்டமிட்டபடி நீதியாத்திரை வாகன பேரணி நடைபெறும் என்றார்.