எனக்காக வீடு கட்டவில்லை- டில்லியில் பிரதமர் மோடி உருக்கம்
1 min read
No house was built for me – PM Modi’s anger in Delhi
3.1.2025
‘எனக்காக வீடு கட்டியிருக்கலாம்; ஆனால் கட்டவில்லை’ என டெல்லியில் நடந்த விழாவில், பிரதமர் மோடி பேசினார்.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் அவர் பல கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
இன்று இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. புதிதாக பிறந்துள்ள இந்த 2025ம் ஆண்டில் இந்தியா மேலும் வலுப்பெறும். இந்தியாவை உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாற்றும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.
இன்று டில்லிக்கு முக்கியமான நாள். வீட்டு வசதி, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. வீடுகள் வழங்கி 4 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றினேன். எனக்காக வீடு கட்டியிருக்கலாம்; ஆனால் கட்டவில்லை. இது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வளர்ந்த இந்தியாவில் சொந்த வீடுகளை வைத்து இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாட்டு மக்களுக்கு சொந்த வீடுகள் இருக்க வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, சில குழந்தைகளை சந்தித்தபோது, அவர்களின் கனவுகள் அடுக்குமாடி குடியிருப்பின் உயரத்தை விட உயர்ந்ததாக இருப்பதை என்னால் காண முடிந்தது.
டில்லி அரசு 10 ஆண்டுகளில் கல்விக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் நிதியை டில்லி அரசு பாதியை கூட செலவிடவில்லை. டில்லி கடந்த 10 ஆண்டுகளில் பெரும் பேரழிவை சந்தித்துள்ளது. மதுக்கடைகளில் ஊழல், அரசுப்பள்ளிகளில் ஊழல் என பல வழிகளில் மோசடி நடந்து வருகிறது. இன்று வீடுகளைப் பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் மகிழ்ச்சியில், பங்கு கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன். இன்று முழு நாடும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.