போப் பிரான்சிசுக்கு அமெரிக்காவின் உயர்ந்த விருது- அதிபர் ஜோ பைடன் வழங்கினார்
1 min read
President Joe Biden presents Pope Francis with America’s highest award
13/1/2025
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வரும் 20-ம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ளார். அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
பதவிக் காலம் முடிவடையும் அதிபர் ஜோ பைடன் விழாவில் கலந்துகொண்டு அதிகாரத்தை அவரிடம் ஒப்படைக்கிறார். இந்த விழாவில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்கிடையே, அதிபர் பதவியில் ஒரு வார காலம் மீதமுள்ள நிலையில் கடைசி வெளிநாட்டுப் பயணமாக இத்தாலி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் கலிபோர்னியா காட்டுத்தீ எதிரொலியாக அதிபர் பைடனின் இத்தாலி பயணம் ரத்துசெய்யப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க அதிபரின் ஆக உயரிய மெடல் ஆப் பிரீடம் விருது போப் பிரான்சிசுக்கு வழங்கப்பட்டது. அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக அந்த உயரிய விருதை வழங்கினார்.
போப் பிரான்சிசிடம் தொலைபேசியில் பேசிய அதிபர் பைடன் இந்த விருதை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ஏழை மக்களுக்கு சேவையாற்றிய போப் பிரான்சிஸின் அர்ப்பணிப்பை பாராட்டினார்.
இதுதொடர்பாக, அதிபர் பைடன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், உங்கள் பணிவையும் பண்பையும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. நீங்கள் காட்டும் அன்புக்கு ஈடு இணை இல்லை என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வளர்ச்சி, பண்புகள், பாதுகாப்பு, உலக அமைதி போன்றவற்றில் சிறந்த பங்காற்றியவர்களுக்கு அதிபரின் மெடல் ஆப் பிரீடம் விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.