இன்பநிதியின் நண்பர்களுக்காக மாவட்ட கலெக்டரை நிற்க வைப்பதா? அண்ணாமலை ஆவேசம்
1 min read
Making the District Collector stand up for Inpanidhi’s friends? Annamalai obsession
16.1.2025
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்களும் துணை முதலமைச்சரின் மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களும் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
இந்நிலையில் துணை முதலச்சரின் மகனின் நண்பர்களுக்காக மாவட்ட ஆட்சியரை அவமானப்படுத்துவதா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 – 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம்.
முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?
துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026-ம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்.