தாக்குதல் சம்பவம்: கபடி வீராங்கனைகள் பத்திரமாக உள்ளனர் – தமிழக அரசு தகவல்
1 min read
Attack incident: Kabaddi players are safe – Tamil Nadu government
24.1.2025
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 – 2025 கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர்.
இந்த போட்டி தொடரில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம், பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே போட்டி நடந்தது. அப்போது, பீகார் வீராங்கனை ஒருவரின் பவுல் பிளே தொடர்பாக தமிழக வீராங்கனை நடுவரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தமிழக வீராங்கனை மற்றும் நடுவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வாக்கு வாதத்தின் போது நடுவர் தமிழக வீராங்கனையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிற தமிழக வீராங்கனைகள் வாக்குவாதம் செய்ய, நடுவருக்கு ஆதரவாக பீகார் தர்பங்கா பல்கலை., மாணவிகள் வந்துள்ளனர். இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால், விளையாட்டு களம் பரபரப்பானது. கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கபடி வீராங்கனைகள் (மாணவிகள்) பத்திரமாக உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துணை முதல்வர் உதயநிதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடைபெற்று 3 மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாணவிகள் அனைவரும் பத்திரமாக திரும்ப பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பயிற்சியாளரை கைது செய்ததாக கூறுவது தவறு. அவர் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.