நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் கோவிலை அபகரிக்க முயற்சி- கிராமத்தினர் போராட்டம்
1 min read
Actor Vadivelu’s supporter attempts to seize the temple – villagers protest
10.2.2025
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டு பரமக்குடியில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திருவேட்டை உடைய அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோவிலாகும். அதேபோல் காட்டுபரமக்குடி கிராமத்தி னரின் பூர்வீக கோவிலாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இக்கோவிலை நடிகர் வடிவேலுவின் தூண்டுதலின் பெயரில் அவரது ஆதரவாளரான அறங்காவலர் பாக்யராஜ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அவருக்கு சொந்தமான கோவிலாக மாற்றம் செய்ய முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அறிந்த காட்டுபரமக்குடி கிராம மக்கள் மற்றும் குலதெய்வ குடிமக்கள் நேற்று கோவிலின் முன்பாக ஒன்று கூடி நடிகர் வடிவேலுக்கு எதிராக கோஷமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதேபோல் கோவிலுக்கு புதிதாக தலைவர், செயலாளர், பொருளாளர் என பொறுப்புகள் உருவாக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலை நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திருவேட்டை உடைய அய்யனார் கோவிலின் பரம்பரை நிர்வாகியும் தற்போது நிர்வாகியாக இருந்து வரும் பாக்கியராஜ் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கோவில் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும், தேவையின்றி கோவிலை ஆக்கிரமிக்க கைப்பற்ற முயற்சி செய்வதாக கூறி போராட்டம் செய்வதாகவும் இந்த கோவில் பிரச்சனை தொடர்பாக வருகிற 11-ந்தேதி பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் கூட்டம் நடக்க இருக்கும் நிலையில் தற்போது இந்த பிரச்சனையை தேவை இன்றி எடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.