10 மீனவர்கள் கைது: வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
1 min read
10 fishermen arrested: Chief Minister M.K. Stalin’s letter to the Foreign Minister
20/2/2025
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனவர்கள் 10 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுக் கூட்டத்தினை கூட்ட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்து இருப்பதாவது;
“இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் வேகமாக அதிகரித்துள்ளது. மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் நீண்ட காலம் பாதிக்கப்படுவதால், இத்தகைய கைது நடவடிக்கைகளைத் தடுத்திட உடனடி மற்றும் தொடர்ச்சியான தூதரக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
எனவே, மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து விடுவிக்க ஏதுவாக, உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தான் ஏற்கனவே வலியுறுத்தியபடி கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தினைக் கூட்டுவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.