June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பெண் வன்கொடுமை: சுட்டு பிடித்த வாலிபரின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள்

1 min read

Woman abuse: Numerous pornographic videos found on arrested youth’s cell phone

22.2.2025
கிருஷ்ணகிரியில் பெண்ணை கூட்டு வன்கொடுமை செய்து வழிப்பறி செய்த வழக்கில் 2 பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தப்பி ஓடியவர்களில் ஒருவரை நேற்று கிருஷ்ணகிரி போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மற்றொரு நபர் ஓடிய போது தவறி விழுந்ததில் கால் முறிந்தது. இதில் சுட்டு பிடிப்பட்ட வாலிபரின் செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரித்ததில், அதில் மேலும் சில ஆபாச வீடியோக்கள் இருந்தனர். இதில் பெண்களை மிரட்டி வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோக்கள் இருப்பதை போலீசார் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பின்புறம் மலை உள்ளது. இந்த மலைக்கு கடந்த 19-ந்தேதி மதியம் 3 மணி அளவில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவரும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் வந்தனர்.

அவர்கள் மலையின் உச்சிக்கு சென்றபோது அங்கு 4 இளைஞர்கள் மதுபோதையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் மலைக்கு வந்த பெண்ணையும், உடன் வந்த நபரையும் கத்தி முனையில் சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, தோடு உள்ளிட்டவற்றை பறித்தனர்.

பின்னர் காம வெறி தலைக்கேறிய அந்த 4 பேரில் 2 பேர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். அந்த நேரம் உடன் இருந்த 2 பேர் தாங்கள் வைத்திருந்த செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் பெண்ணுடன் வந்த நபரின் செல்போனை பிடுங்கி அவர் போனில் இருந்த ஜி.பே வாயிலாக ரூ.7 ஆயிரம் பறித்துக் கொண்டனர்.
இந்த நிலையில் மலையில் இருந்து கீழே வந்து அழுத அந்த பெண்ணை அந்த பகுதியில் இருந்த மக்கள் பார்த்தனர். அவர்கள் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர். அப்போது அந்த பெண் நடந்தவற்றை கூறி விட்டு போலீசிடம் புகார் அளிக்காமல் நேராக ஊருக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினார்கள்.

போலீசாரின் விசாரணையில் பாதிக்கப்பட்டவர் திருப்பத்தூரை சேர்ந்தவர் என தெரியவர அங்கு சென்று அவரிடம் புகார் விவரத்தை பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பெண்ணை மிரட்டி பணம், நகை வழிப்பறி செய்தது கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த கலையரசன் (21), அபிஷேக் (20) மற்றும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ் (22), நாராயணன் (21) என தெரிய வந்தது.
இதில் கலையரசன், அபிஷேக் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த சுரேஷ், நாராயணன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்மலை குட்டை பெருமாள் கோவில் பின்புறமாக பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர், போலீசார் குமார், விஜயகுமார் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது போலீசார் வருவதை கண்ட சுரேஷ், நாராயணன் தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீசார் குமார், விஜயகுமாரை தாக்கி விட்டு தப்ப முயன்றனர். அந்த நேரம் போலீசார் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். தொடர்ந்து சுரேசும், நாராயணனும் ஓட முயற்சி செய்யவே, சுரேசின் வலது முட்டில் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் சுரேஷ் சுருண்டு விழுந்தார். போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய நாராயணன் கீழே விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் காயம் அடைந்த போலீசார் குமார், விஜயகுமார் ஆகியோரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே போல துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சுரேஷ், கால் முறிந்த நாராயணன் ஆகியோரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

துப்பாக்கி சூடு நடந்த இடத்தை போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதே போல தடயவியல் நிபுணர்களும் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலையரசன், அபிஷேக், சுட்டு பிடிக்கப்பட்ட சுரேஷ், நாராயணன் ஆகிய 4 பேரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

அப்போது கைதான சுரேசிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை போலீசார் பார்த்த போது அதிர்ந்து போனார்கள்.

அதில் ஏராளமான பெண்களை சுரேஷ் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ காட்சிகள் இடம் பெற்றிருந்தன. தனியாக வந்த பல இளம்பெண்களை சுரேஷ் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அவற்றை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்துள்ளான். இவ்வாறு எத்தனை இளம்பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என போலீசார் தீவரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து துப்பாக்கியால் சுடப்பட்ட குற்றவாளி சுரேஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கைதான நாராயணன் காலில் மாவு கட்டு போட்ட பிறகு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கலையரசன் மற்றும் அபிஷேக் ஆகிய 2 பேரும் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மலை பகுதியில் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் வந்திருந்தனர். அவர்களில் அந்த பெண்ணை 4 பேர் மிரட்டி நகையை பறித்தனர். இதில் 2 பேர் அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் குற்றவாளிகள் 4 பேரின் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களில் 2 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

மற்ற 2 குற்றவாளிகளை தேடி வந்தோம். அவர்கள் பொன்மலை குட்டை பெருமாள் கோவில் பின்புறமாக இருப்பதாக தகவல் வந்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் போலீசார் சென்றனர்.

அந்த நேரம் குற்றவாளிகள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் 2 போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றனர்.

அந்த நேரம் போலீசார் தற்காப்புக்காக குற்றவாளிகளில் சுரேஷ் என்பவரை சுட்டு பிடித்தனர். மற்றொரு நபர் நாராயணன் என்பவர் தப்ப முயன்ற போது தவறி விழுந்ததில் கால் முறிந்தது. கைதான சுரேஷ் மீது 2 அடிதடி வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிருஷ்ணகிரியில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறி செய்த வழக்கில், தப்ப முயன்ற நபரை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.