மொழி விவகாரத்தில் பேசி வைத்து திமுக, பாஜக மக்களை ஏமாற்றுகிறார்கள்: விஜய் பேச்சு
1 min read
DMK, BJP are deceiving people by talking about language issue: Vijay’s speech
26.2.2025
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது:-
என் நெஞ்சில் குடியிருக்கும்’ தோழர் தோழிகளுக்கு வணக்கம். அரசியலே வேற லெவல் தான். மக்களுக்கு பிடித்துப் போன ஒருவர் அரசியலுக்கு வந்தால், சிலர் எதிர்க்கிறார்கள். என்னை எப்படி வீழ்த்தலாம் என சிலர் குழப்பத்தில் உள்ளனர். 1967, 1977 பாணியில் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவோம். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வருவோம்.
தவெகவில் இளைஞர்களே அதிகம். அண்ணா, எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போதும் அவர்களின் பின்நின்றவர்கள் இளைஞர்களே. எந்த பெரிய கட்சிக்கும் சளைத்தது அல்ல தவெக. விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்த உள்ளோம். தவெக பூத் கமிட்டி மாநாட்டுக்கு பிறகு எங்களின் பலம் அனைவருக்கும் தெரியும். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை, எது எப்போது வேண்டுமானாலும் மாறும். அரசியலில் யார், யாரை எப்போது எதிர்ப்பார்கள் என தெரியாது; என்னை வீழ்த்த நினைக்கிறார்கள்.
மொழி விவகாரத்தில் பேசி வைத்து திமுக, பாஜக அரசுகள் மக்களை ஏமாற்றுகிறார்கள். கல்வி நிதி விவகாரத்தில் குழந்தை தனமாக சண்டையிடுகின்றனர். பாஜகவும், திமுகவும் பேசி வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி ஹேஷ் டேக் போட்டு விளையாடுகின்றனர். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். சுயமரியாதையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது.
நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம், ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சிக்கு உரிமைக்கு எதிராக, ஒரு மாநில அரசின் மொழிக்கொள்கையை கல்விக்கொள்கையை கேள்விக்குறியாக்கி, வேறொரு மொழியை வலுக்கட்டாயமாக அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால்… எப்படி ப்ரோ?. 3-வது மொழியை திணிக்கும் மும்மொழி கொள்கையை உறுதியாக எதிர்க்கிறோம்.
கல்வி நிதி விவகாரத்தில் எல்கேஜி, யூகேஜி பிள்ளைகள் போல் சண்டையிடுகிறார்கள். எல்கேஜி, யூகேஜி பிள்ளைகள் போல் சண்டை, ‘வாட் ப்ரோ… இட்ஸ் வெறி ராங் ப்ரோ’ (What Bro.. It’s Wrong Bro). திமுக, பாஜகவின் ஏமாற்று வேலைகள் குறித்து மக்களுக்கு நன்றாகவே தெரியும். நம்ம கட்சி எளிய மக்களுக்கான கட்சிதானே; பண்ணையர்களுக்கான கட்சி இல்லையே, இப்படிப்பட்ட மனநிலையிலுள்ள பண்ணையார்களை அரசியலை விட்டே அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.