பள்ளிகளில் தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும்- தெலுங்கானா அரசு உத்தரவு
1 min read
Telangana government orders to make Telugu language a compulsory subject in schools
27.2.2025
2025-26 கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு ஜில்லா பரிஷத், மண்டல் பரிஷத், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் தெலுங்கு கற்பிப்பதை கட்டாயமாக்குவதற்காக 2018 ஆம் ஆண்டு தெலுங்கானா (பள்ளிகளில் தெலுங்கு கட்டாயக் கற்பித்தல் மற்றும் கற்றல்) சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்தது.
இருப்பினும், முந்தைய பி.ஆர்.எஸ். அரசு பல்வேறு காரணங்களால் இந்தச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக நிர்வாகங்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி, வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. மற்றும் பிற வாரியங்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு தெலுங்கு கற்பிக்க முடிவு செய்துள்ளதாக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ரேவந்த் ரெட்டி, தேர்வுகளை நடத்துவதற்கு ‘எளிய தெலுங்கு’ பாடப் புத்தகமான ‘வெண்ணெலா’வைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார். ‘எளிய தெலுங்கு’ பாடப்புத்தகம் தெலுங்கு தாய்மொழியாக இல்லாத மாணவர்களுக்கும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரியங்களின் கீழ் உள்ள பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.